தாய்லாந்தின் புகழ்பெற்ற மங்கி விரிகுடா, ஃபி ஃபை தீவுகள் அருகே அமைந்துள்ளது. அழகிய கடற்கரைகளுக்காக அறியப்பட்ட இந்த இடம், தற்போது எதிர்பாராத சுகாதார அபாயங்கள் காரணமாக கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏஞ்சலா கியாகாஸ் மங்கி விரிகுடாவில் நீந்திய போது தற்செயலாக சிறிதளவு தண்ணீரை குடித்துவிட்டார். இதில் அவருக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, 16 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது.
அவரை சிகிச்சை செய்த மருத்துவர்கள், ஃபி ஃபை தீவுகளைச் சுற்றி போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாததே இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று தெரிவித்தனர். இது அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆனால் குறைந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு சவால்களை கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஏஞ்சலா தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ”ஆழமற்ற கடற்கரைகளில் அல்லது கடற்கரை ரீதியான பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். நான் மங்கி பே கடற்கரையில் சிறிது தண்ணீரை குடித்துவிட்டேன். இதனால் எனக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டது.
யாராவது என்னை எச்சரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதனால் தான் நான் உங்களை எச்சரிக்கின்றேன். என்னை போல் யாரும் ஆகிவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். தாய்லாந்து மிகவும் அழகான நாடுகளில் ஒன்று, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எந்த வகையான நீரிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
சிலர் தென்கிழக்கு ஆசிய நீரில் நீந்தியபின் தங்களுக்கு ஏற்பட்ட இதேபோன்ற நோய்களைப் பகிர்ந்து கொண்டனர், மற்றவர்கள் கலாச்சார மற்றும் உயிரியல் வேறுபாடுகளை சுட்டிக்காட்டினர். பல உள்ளூர் மக்களும் நீண்டகால குடியிருப்பாளர்களும் தங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளூர் பாக்டீரியா சூழலுக்கு மிகவும் பழக்கப்பட்டுவிட்டது என்றும், அது சுற்றுலாப் பயணிகளைப் போல அவர்களை பாதிக்காது என்றும் குறிப்பிட்டனர்.
அதில் உள்ளூர்வாசி ஒருவர், "நானும் தாய்லாந்தை சேர்ந்தவன் உள்ளூர்வாசிகளுக்கென சில நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. இதனால் எங்களால் கடற்கரையில் நீந்தவும் எதையும் சாப்பிடவும் முடியும். ஆனால் இங்கு வந்த எனது நண்பனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உள்ளூர் பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிப்பதில்லை. மாறாக வெளிநாட்டிலிருந்து இங்கு வருபவர்களுக்கு அதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி இல்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
தாய்லாந்து உலகின் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அதிக போக்குவரத்து உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் பொது சுகாதார பாதிப்புகள் அதிகரித்து வருவது, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கலாம் என்று சுற்றுலா நிபுணர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள், சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள் மற்றும் சர்வதேச சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.