யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் தம்பி ராமையா. திறமையான நடிகராக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பன்முகம் கொண்டவர்.
சமீபத்தில் டாக்டர் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்கள் குறித்து மனம் திறந்து பேசினார் தம்பி ராமையா. அப்போது அவர் தனது சம்பந்தி, பிரபல நடிகர் அர்ஜுன் குறித்து குறிப்பிடுகையில், "என் சம்பந்தி சார் அர்ஜுன் உடற்பயிற்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அவரைப் போல் இல்லை. அவர் இரும்பை வளைத்து பயிற்சி செய்பவர், நான் கரும்பை வளைத்து உடற்பயிற்சி செய்பவன். அவர் வேறு, நான் வேறு" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
மேலும் தனது உடற்பயிற்சி குறித்து பேசிய அவர், "அடிப்படையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே நான் கவனமாக இருப்பேன். என் வீட்டைச் சுற்றி வாரத்திற்கு குறைந்தது 50 கிலோமீட்டர் தூரம் நடந்து விடுவேன். சில நாட்களில் 5 கி.மீ நடப்பேன், சில நாட்களில் 7 கி.மீ வரை நடப்பேன்.
எப்படியிருந்தாலும், வாரத்திற்கு 50 கி.மீ நடப்பதுதான் இப்போதைக்கு என்னுடைய உடற்பயிற்சி முறை" என்று தெரிவித்தார்.
உணவுப் பழக்கம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த தம்பி ராமையா, "உணவு விஷயத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் எனக்கே சொல்லத் தெரியாது. காலையில் இட்லி, மதியம் ரசம் சாதம், இரவுக்கு தோசையோ அல்லது சப்பாத்தியோ சாப்பிடுவேன். இடையில் உலர் பழங்கள் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை எடுத்துக் கொள்வேன். உணவு விஷயத்தில் நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், அளவோடு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என் மனதில் இருக்கும்" என்று கூறினார்.
இவ்வாறு யதார்த்தமான நடிப்பாலும், எளிமையான வாழ்க்கை முறையாலும் அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கிறார் நடிகர் தம்பி ராமையா.