திருநெல்வேலியில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று (12-01-2025) மரணமடைந்தது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் காந்திமதி என்ற யானை நன்கொடையாக கொடுக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் காந்திமதி யானை முன்னே செல்ல திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்தநிலையில், காந்திமதி யானைக்கு 56 வயதாகும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக யானை காந்திமதி யானைக்கு மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மூட்டு வலி அதிகமானதால் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த ஒரு மாத காலமாக யானை காந்திமதி படுக்காமல் நின்றவாறே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்தநிலையில், நேற்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில், மீண்டும் அதனால் எழ முடியவில்லை. இதனால் உடனடியாக அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து யானை காந்திமதிக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து கிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று காலை 7.30 மணிக்கு மரணமடைந்தது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.