திருப்பதியில் ஜனவரி 7 ஆம் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, " திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, ஆனிவார ஆஸ்தானம், உகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி விழா என ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம்.
அதன்படி ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 7 ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
தூய்மைப்பணி முடிந்ததும், கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு ஜனவரி 7 ஆம் தேதி கோயிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
எனவே ஜனவரி 6 ஆம் தேதியே வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“