/indian-express-tamil/media/media_files/Y7RgU7kSnF4IiBvkm1tB.jpg)
திருப்பதியில் லட்டு விலை குறைப்பா? சிறப்பு நுழைவு தரிசன கட்டணம் உயர்வா? இணையத்தில் வைரலாகும் தகவல்; தேவஸ்தானம் விளக்கம்
திருப்பதியில் சிறப்பு நுழைவு தரிசன கட்டணம் மற்றும் லட்டு விலை குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை தேவஸ்தானம் மறுத்துள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. தரிசன டிக்கெட்டுடன் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதல் லட்டுகள் தேவைப்படின் கவுண்டர்களில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இங்கு ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் திருப்பதியில் இலவச தரிசனம் தவிர ரூ.300 செலுத்தி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, விரைவு தரிசனம் செய்யலாம்.
இந்நிலையில், திருப்பதியில் லட்டு பிரசாதத்தின் விலை 50 ரூபாயில் 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கட்டணம் 300 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வருகிறது.
இதேபோல், சில வாட்ஸ்அப் குரூப்களில் மற்றொரு தகவலும் பரவியது. அதில், சிறப்பு நுழைவு சீட்டுகளை அதிக விலையில் பெறலாம் என சிலரது போன் எண்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து தேவஸ்தானம் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பலரும் விளக்கம் கேட்டனர்.
இந்தநிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது;
திருமலை ஸ்ரீவாரி லட்டு மற்றும் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கட்டணத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளதாக பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ரூ.300 மற்றும் லட்டு பிரசாதத்தின் விலை ரூ.50 என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக (https://ttdevasthanams.ap.gov.in) தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று பக்தர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
பல்வேறு மாநிலங்களின் சுற்றுலா துறைகளுக்கும் குறிப்பிட்ட அளவிலான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறை மூலம் வர விரும்பும் பக்தர்கள் புரோக்கர்களை அணுகாமல், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சுற்றுலாத் துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தரிசன டிக்கெட்டுகளைப் பெறலாம். சுற்றுலாத் துறை இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதற்காக, சில புரோக்கர்கள் அப்பாவி மக்களிடம் கூடுதல் தொகையை வசூலிப்பது தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவின் கவனத்திற்கு வந்துள்ளது. அதுபோன்று அப்பாவி பக்தர்களிடம் மோசடி செய்யும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு பக்தர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
NO CHANGE IN Rs. 300(SED)TICKETS AND LADDU RATES- TTD URGES DEVOTEES NOT TO BELIEVE FAKE NEWS ON SOCIAL MEDIA PLATFORMS pic.twitter.com/07akpcBWMw
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) June 22, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.