திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.
இலவச மற்றும் ஸ்லாட்டட் தரிசனத்துக்கான வரிசை மிக நீண்டதாக மாறியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாள்களில் பக்தர்கள் பல மணிநேரங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் தொடங்கி தரிசன டிக்கெட்களை விற்பனை செய்கின்றனர். இணையதளமும் டிக்கெட்களும் போலியானவை என்பதை அறியாமல் பக்தர்கள் அதை வாங்குகிறார்கள். தரிசனத்துக்குச் செல்வதற்கு முன்பாக தேவஸ்தான ஊழியர்களின் சோதனையின் போது அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இதனால் போலி டிக்கெட் எடுத்து பணத்தை இழந்த பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த தமிழகத்தைச் சேர்ந்த நெட் சென்டர் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் பக்தர்கள் தங்கள் ஆதார் எண், முகவரியுடன் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இடைத்தரகர்களை நாடுவதன் மூலம் பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை இழக்க வேண்டாம்.
பக்தர்கள் பெறும் டிக்கெட்டுகள் தரிசனத்துக்கு செல்வதற்கு முன் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். அப்போது பக்தர்கள் பெற்ற தரிசன டிக்கெட்டுகள் போலியானது எனத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பக்தர்கள் தேவையில்லாத சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
சாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வழங்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“