திருப்பதியில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வியாழக்கிழமை (அக்டோபர் 23) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். அதேநேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்கு முன்பே சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்திற்கான லக்கி டிப், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள், மாற்றுதிறனாளி பக்தர்கள் உள்ளிட்டோருக்கான டிக்கெட் புக்கிங் இதுவரை நிறைவடைந்து விட்டது.
இந்நிலையில் ஜனவரி மாதம் திருமலையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்கள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங் அக்டோபர் 24 ஆம் தேதியான நாளை துவங்க உள்ளது. ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் புக்கிங் நாளை காலை 10 மணிக்கும், அங்கபிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங் காலை 11 மணிக்கும் துவங்குகிறது. அதோடு ஜனவரி மாதத்தில் திருப்பதி மற்றும் திருமலையில் தங்குவதற்கான அறைகளுக்கான புக்கிங்கும் நாளை பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே (ttdevasthanams.ap.gov.in) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதனிடையே ஜனவரியில் முதல் 14 நாட்கள் மார்கழி மாதத்தில் வரும் நிலையில், வைகுண்ட துவார தரிசனம் உள்ளதால் ஏற்கனவே பல சேவைகளை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஜனவரி 19 ஆம் தேதி வரை சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, அர்ச்சனை ஆகிய லக்கி டிப் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் ஜனவரி 10 ஆம் தேதி துவங்கி ஜனவரி 11 ஆம் தேதி வரை திறந்திருக்கும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட் புக்கிங் குறித்த அறிவிப்பினை தேவஸ்தான நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.
அதே போல் அங்கப்பிரதட்சண டிக்கெட்களும் ஜனவரி 1, 2, 9 முதல் 19 மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆர்ஜித சேவைகளும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் ஜனவரி 9 மற்றும் 19 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் ஜனவரி 9 முதல் ஜனவரி 19 வரையிலான தேதிகளில் ரூ.300 சிறப்பு தரிசனத்திலும் ஏதாவது மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஜனவரி 1, 2, ஜனவரி 9 முதல் 19 ஆகிய தேதிகளில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக் செய்யும் போது, அன்றைய தினத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு புக் செய்ய வேண்டும், அல்லது இது போன்ற குழப்பங்களை தவிர்க்க ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு வரும் தேதிகளில் தரிசன டிக்கெட்டை புக் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“