/indian-express-tamil/media/media_files/tirupathi-3.jpg)
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கார், பைக், பேருந்துகளில் மக்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் மலைப் பாதை வழியாக கோவிலுக்கு செல்ல தேவஸ்தானம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தானத்தின் துணை வன பாதுகாவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வனவிலங்குகளின் இனப்பெருக்க காலம் ஆகும்.
இதனால் மலைப் பாதைகளில் வனவிலங்கள் சுற்றித் திரியும். குறிப்பாக, வனவிலங்குகள் மலைப்பாதை வழியாக அடிக்கடி சாலையை கடக்கும். அப்போது வாகன ஓட்டிகள் மீது வனவிலங்குகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு திருமலை மலைப்பாதைகளில் வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை இரு சக்கர வாகனங்கள் இரவு நேரங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு மலைப்பாதையில் பயணிக்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு, தேவஸ்தானத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.