/indian-express-tamil/media/media_files/2025/08/25/tk-kala-2025-08-25-11-40-21.jpg)
TK Kala
தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில், ஒரு சில முகங்கள் மட்டுமே நம் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். ஆனால், அந்த முகங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு குரல், நம்மை ஆழமாக ஈர்த்து, அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளை அப்படியே நம் உள்ளத்தில் விதைக்கும். அப்படி ஒரு அசாத்தியக் கலைஞர்தான் நடிகை மற்றும் பின்னணிப் பாடகி டி.கே.கலா.
இவர் பிரபல நகைச்சுவை நடிகை சண்முகசுந்தரியின் மகள். கலைக் குடும்பத்தில் பிறந்ததால், இயல்பாகவே இவருக்குள் கலை உணர்வு நிரம்பி வழிந்தது. சிறு வயதிலேயே இசை மீது கொண்ட அதீத ஆர்வம், இவரைப் பின்னணிப் பாடகியாக மாற்றியது. இவருடைய தாயாரின் குருவான, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், இவரின் திறமையைக் கண்டறிந்து, 'அகத்தியர்' என்ற படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். அந்தப் படத்தின் "தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்ற பாடல், இவருக்குள் இருந்த பாடகியை உலகிற்கு அடையாளம் காட்டியது. இப்பாடல் இன்றும் காலம் கடந்த ஒரு கிளாசிக் பாடலாகக் கொண்டாடப்படுகிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்கள் நடித்த படங்களிலும், இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். பின்னணிப் பாடகியாக மட்டுமே அறியப்பட்ட டி.கே.கலா, தனது நடிப்புத் திறமையையும் 'கில்லி' படத்தில் நிரூபித்தார். நடிகர் பிரகாஷ்ராஜின் அம்மாவாக இவர் நடித்த அந்த கதாபாத்திரம், பலரால் பாராட்டப்பட்டது. அதன் பிறகு, 'குருவி', 'மச்சக்காரன்' போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார். இவருடைய இயற்கையான நடிப்பு, அந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒரு தனித்துவமான அழகைச் சேர்த்தது.
2006 ஆம் ஆண்டில், இவருடைய கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு இவருக்கு 'கலைமாமணி' விருது வழங்கி கௌரவித்தது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.கே.கலா. தன் திரையுலகில் நிகழ்ந்த பல சுவாரஸ்ய சம்பவங்களை பற்றி நினைவுகூர்ந்தார்.
”முதல்ல நான் பாடகியாகத்தான் அறிமுகமானேன். நடிகைங்கிறது எல்லாம் இப்போ சமீப காலமாத்தான். முதல்ல நான் ஒரு பாடகி. என் அம்மா பெரிய நடிகை. நீங்க நிறைய படங்கள்ல அவங்களை பார்த்திருப்பீங்க.
வடிவேலு நடிச்ச படத்துல, 'என்னடா காலையிலதானடா மகாலட்சுமினு சொல்லிட்டுப் போன' அப்படினு ஒரு டயலாக் வரும். அந்த படத்துல நடிச்சவங்கதான் என் அம்மா. நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்க.
அம்மாவோட மறைவுக்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் தரணி, என்னை நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்போதான் முதன் முதல்ல நான் 'கில்லி' படத்துல நடிச்சேன். பிரகாஷ் ராஜ்க்கு அம்மாவா நடிச்சேன். அப்புறம் 'குருவி' படத்துல விஜய்க்கு அம்மாவா நடிச்சேன். அந்தப் படங்கள் எல்லாம் உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். ஆக, அதுக்கப்புறம்தான் நான் நடிகையானேன்." என்று டி.கே. கலா அந்த நிகழ்ச்சியில் கலகல சிரிப்புடன் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.