இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் கண்களை உங்களால் நம்ப முடியவில்லையா? ஆச்சரியம் வேண்டாம். இதில் எந்த ஃபோட்டோ ஷாப்பும் செய்யப்படவில்லை. உலகிலேயே அதிக எடைக் கொண்ட குண்டு சிறுவன என்று அழைக்கப்பட்ட ஆர்யா பெர்மனா இன்று ஒட்டு மொத்த மீடியாவிலும் தலைப்பு செய்தியாக மாறி விட்டான்.
தன்னம்பிக்கை, விடா முயற்சி, குடும்பத்தின் துணை, துண்களாக நின்ற நண்பர்கள், இவை தான் ஆர்யாவின் தோற்றம் இப்படி மாற காரணம்.
யார் இந்த ஆர்யா பெர்மனா:
மாயா பஜார்' படத்தில் வரும் 'கல்யாண சமையல் சாதம்...' பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். 'ரங்கா ராவ்'க்குப் பதிலாக, இந்த சிறுவனை நினைத்துக் கொள்ளுங்கள். ஆம் ரங்கா ராவை விட அதிக அளவு எடையைக் கொண்ட குழந்தைதான் ஆர்யா பெர்மனா. இந்தோனேசியாவின், மேற்கு ஜாவா மாகாணத்திலுள்ள சாதாரண விவசாயக் குடும்பத்துப் பெற்றோருக்குப் பிறந்த ஆர்யாவின் தற்போதைய வயது 12.
ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு அதாவது ஆர்யாவின் 10 வயதில் அவனுடைய எடை என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள். 192 கிலோ. உலகிலேயே அதிக எடைக் கொண்ட குண்டு சிறுவன் ஆர்யாவாக தான் இருந்தான்.
சாதாரணமாக அணியும் எந்த உடைகளையும் அணிய முடியாது. நாள் ஒன்றுக்கு, அரிசி சாதம், பீஃப் வகை உணவுகளையும் சேர்த்து சுமார் ஐந்து வகையான உணவு வகைகளை சாப்பிடுவான். வயது வந்தோர் இரண்டு பேர் சாப்பிடக்கூடிய உணவை, ஒரே வேளையில் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுவான். உடல் எடை அதிகரித்ததாலும், அதிகமாக உண்பதாலும் அவனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பெற்றோர் பார்த்துக் கொண்டனர்.
இவனை குளிப்பாட்டுவதற்கென தனியே வீட்டிற்கு முன்பு குளிக்கும் தொட்டியை கட்டி இருந்தனர். மூச்சுவிடுவதில் சிரமப்பட்ட ஆர்யா, எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பான். சாப்பிடுவது, தூங்குவது என்றே இவனுடைய நாட்கள் சென்றது.
ஆர்யா பிறக்கும் போது சாதரண குழந்தை போன்று தான் இருந்துள்ளான். 2 வயதிற்கு மேல் சென்றவுடன் இவனின் எடை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.இப்படி உடல் எடை அதிகரித்து கொண்டே சென்றதால், அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவனது பெற்றோர்கள், கிராமத்தில் இருக்கும் மருத்துவர்களை எல்லாம் அழைத்து வந்து பார்த்தனர்.
இந்த சிறுவனை பார்ப்பதற்காகவே அவனது வீட்டில் பெரும் கூட்டமும் அங்கு கூடிவிடும். இந்நிலையில், அந்த சிறுவனின் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆர்யாவுக்கு இரைப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிக்ச்சையின் போது அந்த சிறுவனுடைய இரைப்பையின் அளவு குறைக்கப்பட்டது.
இதன் மூலம் சிறுவனால் முன்புபோல அதிக உணவை எடுத்துக்கொள்ள முடியாமல் போனது.பசியைத் தூண்டக் கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோனின் சுரப்பையும் கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் பெரிய வித்யாசம் ஏதும் ஏற்படவில்லை.
சிறுவனின் எடை தொடர்ந்து அதிகரித்த படி இருந்ததால், மருத்துவர்கள் குழப்பமடைந்தனர்.இறுதியில் மருத்துவர்கள், உணவியல் வல்லுநர்களின் அறிவுரைப்படி இனிப்பு, இனிப்பு கலந்த குளிர்பானங்கள், சர்க்கரை சேர்த்த உணவு வகைகளை ஆர்யாவுக்கு தவிர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து கடும் உடற்பயிச்சி எப்படி மேற்கொள்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளனர்.இரண்டு ஆண்டு கடும் போராட்டம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் தற்போது 95 கிலோ எடையைக் குறைத்து சாதித்துவிட்டான்.கடந்த ஏப்ரல் மாதம் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் ஆர்யாவுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 3 வாரங்களில் அவனது எடை கணிசமாகக் குறைந்தது.
தற்போது நன்றாக நடக்கிறான். 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்டான்.சுறுசுறுப்பாக இருக்கிறான், நண்பர்களுடன் பேட்மின்டன், கால்பந்து ஆடுகிறான். தினமும் 3 கி.மீற்றர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்கிறான். பழைய டி ஷர்ட்டை அணிந்து கொள்கிறான். மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டான்.
”இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நடக்கிறேன், விளையாடுகிறேன். கால்பந்தாட்டம் தான் எனது விருப்பம். தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை’ என தனது விருப்பங்களை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்கிறான். 2 ஆண்டுகளில் ஆர்யாவிடம் காணப்பட்டுள்ள இந்த மாற்றம் அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக மீடியாக்கள் தினமும் ஆர்யாவை பேட்டி கண்டு வருகின்றன. ஆர்யா சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் அவனுக்கு பக்க பலமாக இருந்து அவனை தேற்றியவர்கள் அவனின் குடும்பம் மற்றும் நண்பர்கள் தான். இவர்கள் அனைவரும் பட்ட கஷ்டம் இன்று வீண் போகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.