கடந்த 30 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைவரும் கோடைக் காலத்தை திகிலுடன் எதிர்நோக்கியுள்ள நேரத்தில், மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (ஒவ்வொரு வருஷமும் இதையே தான் சொல்றீங்க-னு நினைக்குற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது!).
கடந்த 30 ஆண்டுகளில் பருவ மழைக்கு முந்தைய (மார்ச், மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத் தில் அதிகபட்ச வெப்ப நிலையானது முந்தைய ஆண்டுகள் அதே காலக்கட்டத்தில் இருந்த வழக்கமான வெப்ப நிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பமும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலை ஏப்ரல் மாதம் மத்தி வரை நீடிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை, திருத்தணி நகரங்களில் கோடை வெப்பம் அதிகளவு இருக்கும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இரவில் நிலவி வந்த கடுமையான குளிர் முடிவுக்கு வந்துள்ளது.