பத்மநாப சுவாமி கோயில் முதல் திருப்பதி வரை... இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான கோயில்களில் சொத்து மதிப்பு, தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், அசையாச் சொத்துகள் மற்றும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில், பணக்கார கோயில்களில் இடம்பிடித்திருக்கும் டாப் 5 கோவில்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான கோயில்களில் சொத்து மதிப்பு, தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், அசையாச் சொத்துகள் மற்றும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில், பணக்கார கோயில்களில் இடம்பிடித்திருக்கும் டாப் 5 கோவில்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
top5 temples

பத்மநாப சுவாமி கோயில் முதல் திருப்பதி வரை... இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை கலை, கலாசாரம், வரலாறு மற்றும் செல்வத்தின் இருப்பிடங்கள். ஆண்டாண்டு காலமாக பக்தர்களின் காணிக்கைகள், அரசர்களின் நன்கொடைகள் மற்றும் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்கள், சில கோயில்களை உலகிலேயே மிக அதிக செல்வம் படைத்த நிறுவனங்களாக மாற்றியுள்ளன. இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான கோயில்களில், சொத்து மதிப்பு, தங்கம், வெள்ளி, அசையாச் சொத்துகள் மற்றும் வருமானம் ஆகியவற்றின்படி பணக்காரக் கோயில்களில் இடம்பிடித்திருக்கும் டாப் 5 கோயில்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். இந்தக் கோயில்களின் செல்வம் வெறும் பணத்தின் வடிவில் மட்டுமல்ல, பக்தி, நம்பிக்கை, கலை மற்றும் வரலாற்றுப் பெருமைகளின் வடிவத்திலும் கொட்டிக் கிடக்கின்றன.

Advertisment

1. ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில், திருவனந்தபுரம், கேரளா:

இந்தியாவின் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் செல்வம் படைத்த கோயில் என அறியப்படுவது திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில். 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், பிரம்மாண்டமான அனந்தசயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார். 2011-ம் ஆண்டில், நீதிமன்ற உத்தரவின்பேரில், கோயிலின் ரகசிய பெட்டகங்கள் திறக்கப்பட்டபோது, உலகம் முழுவதும் அதிர்ந்துபோனது.

kerala

Advertisment
Advertisements

5 ரகசிய அறைகளிலிருந்து ஒரு லட்சம் கோடி (சுமார் $22 பில்லியன்) மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி, விலைமதிப்பற்ற ரத்தினங்கள், சிலைகள் மற்றும் ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுள் பல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், கலைநயமிக்கவையாக இருந்தன. குறிப்பாக, 'அறை B' என்று அழைக்கப்படும் 6-வது ரகசிய பெட்டகம், நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த அறை மர்மங்கள் மற்றும் தொன்மங்களால் சூழப்பட்டுள்ளது, மேலும் அதன் உள்ளே உள்ள செல்வத்தின் மதிப்பு கணக்கிட முடியாதது என நம்பப்படுகிறது.

2. திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்: 

அடர்ந்த திருமலை குன்றுகளின் மேல் அமைந்திருக்கும் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில், உலகிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும். 'கலியுக வரதன்' என பக்தர்களால் போற்றப்படும் ஏழுமலையானின் இந்தக் கோயில், நிதி ரீதியாகவும் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ($36 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

tiruppathiஇந்த மதிப்பு நிரந்தர வைப்பு நிதி, தங்கம் (10,000 கிலோ), வெள்ளி, எண்ணற்ற நிலங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், உண்டியல் காணிக்கைகள், முடி காணிக்கைகள் மற்றும் பல்வேறு சேவைகள் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. அதன் அன்னதான திட்டங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் சமூக சேவையிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

3. சாய் பாபா கோயில், ஷீரடி, மகாராஷ்டிரா:

மஹாராஷ்டிராவின் ஷீரடியில் அமைந்துள்ள ஸ்ரீசாய் பாபா கோயில், சாதி, மத பேதமின்றி உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் புனிதத் தலமாகும். 'சப் கா மாலிக் ஏக்' (எல்லா கடவுளுக்கும் ஒருவர்) என்ற சாய் பாபாவின் போதனைகள், இந்த கோயிலை அனைவருக்கும் திறந்த ஒரு இடமாக மாற்றியுள்ளன. ஷீரடி சாய் பாபா கோயில் அதன் பிரம்மாண்டமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வங்கி இருப்பு மற்றும் நன்கொடைகள் மூலம் பெரும் செல்வம் படைத்துள்ளது.

sai babaசுமார் ரூ.320 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன், இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,000 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகளாகப் பெறப்படுகின்றன. ஷீரடி கோயில் அறக்கட்டளை, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை நடத்தி வருகிறது.

4. வைஷ்ணோ தேவி கோயில், கத்ரா, ஜம்மு-காஷ்மீர்: 

ஜம்மு-காஷ்மீரில், திரிகுடா மலைகளின் உச்சியில் அமைந்திருக்கும் வைஷ்ணோ தேவி கோயில், திருப்பதிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக பக்தர்கள் யாத்திரை வரும் கோவில்களில் ஒன்றாகும். இது குகைக் கோயில் ஆகும், அங்கு துர்கா தேவி 3 வடிவங்களில் (மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி) காட்சி தருகிறார்.

vaishanvi templeகடுமையான புவியியல் சவால்களுக்கு மத்தியிலும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் காணிக்கைகள், நன்கொடைகள், சேவைகளின் மூலம் இந்தக் கோயில் கணிசமான வருமானத்தை ஈட்டுகிறது. பக்தர்கள் மலைப்பாதையில் நடந்துவரும் தூரம், குதிரை சவாரி, ஹெலிகாப்டர் சேவை, ரோப்வே என பல வழிகளில் இங்கு வந்து அடைகின்றனர். இந்தக் கோயிலின் சொத்து மதிப்பு பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்கள் குறைவாக இருந்தாலும், அதன் ஆண்டு வருமானம் பல நூறு கோடிகளைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

5. சபரிமலை ஐயப்பன் கோயில், பத்தனம்திட்டா, கேரளா: 

கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், உலகிலே அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் யாத்திரையாக வரும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாகும். 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி, படியேறி ஐயப்பனை தரிசிப்பது ஒரு தனித்துவமான ஆன்மீக அனுபவம்.

aமண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில், கோடிக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருவதால், இந்தக் கோயில் கணிசமான வருமானத்தை ஈட்டுகிறது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கோயில் வளாகம், நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அடங்கும். இந்த கோயில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், அன்னதானம் மற்றும் பிற சமூக நலப் பணிகளை மேற்கொள்கிறது.

இந்த கோயில்கள் செல்வத்தின் இருப்பிடங்கள் மட்டுமல்ல. அவை இந்தியாவின் பக்தி, கலாச்சாரம், கலை மற்றும் வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றும் அழியாத சின்னங்கள். ஒவ்வொரு செங்கல்லிலும், சிற்பத்திலும், காணிக்கையிலும், தலைமுறை தலைமுறையாக பக்தர்களின் நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் பொதிந்துள்ளன. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: