மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரியூர்ப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி இன்று (ஏப்ரல் 28) சமத்துவ மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
குறிப்பாக, அட்டப்பட்டி, பூதமங்கலம், கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கண்மாய் கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், தாங்கள் கொண்டு வந்த வலைகளை பயன்படுத்தி கெளுத்தி, கெண்டை, கட்லா, ரோகு, விரால், அயிரை போன்ற மீன்களை பிடித்தனர்.
இவ்வாறு பிடித்த மீன்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று படையலிட்டு சமைத்து சாப்பிட்டனர். விவசாய வளர்ச்சிக்கு இத்தகைய பாரம்பரிய மீன்பிடி திருவிழா பங்களிப்பதாக அப்பகுதியினர் நம்புகின்றனர்.