திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பக்தர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர். திருச்சி கோபால் தாஸ் ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினர் இந்த கிரீடத்தை உருவாக்கி உள்ளனர்.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு புதிய வைர கிரீடம் சாற்ற இஸ்லாமிய பக்தர் வைர கிரீடத்தை அர்ப்பணித்தார்.
ரெங்கநாதரை தரிசனம் செய்ததற்கு பின்னர் ஜாகீர் உசேன் செய்தியாளர்களிடம் பேசியதாவது; "திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சாமி மேல் உள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன். ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3,160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு ரம்மியமாக உள்ளது. இதனை வடிவமைப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது. உலகில் முதல்முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் என்பது இதன் தனி சிறப்பு. பிறப்பால் நான் இஸ்லாமியராக இருந்தாலும், ரெங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்தேன்" என ஜாகீர் உசேன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இது குறித்து இதை வடிவமைத்த கோபால் தாஸ் ஜெம்ஸ் அண்ட் ஜுவல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டில் ஜாத் சி.ஷாஹ கூறியதாவது; கடந்த 1925 ஆம் ஆண்டு என்னுடைய தாத்தா திருச்சிக்கு வந்தார், நாங்கள் வறுமையில் தான் வளர்ந்தோம். அவர் கஷ்டப்பட்டு உழைத்த போதிலும் தர்மம் நிறைய செய்தார். அந்த தர்மம் தான் எங்களை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அவர் செய்த அளவிற்கு எங்களால் தர்மம் செய்ய முடியவில்லை. அடுத்து என் தந்தைக்கு பிறகு இந்த கடை 1990-ல் என் கைக்கு வந்தது. கடையை முன்னுக்கு கொண்டு வந்து தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன், அதனால் என் மகன்களிடம் கடையின் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு சிறப்பான கிரீடம் செய்யும் அளவிற்கு தற்போது வளர்ந்து இருக்கின்றனர்.
நாங்கள் சமயபுரம் கோவில், மகா பெரியவர், திருப்பூரை சேர்ந்த கணேசன் போன்றவர்களுக்கு கிரீடம் செய்து கொடுத்து உள்ளோம். அதற்காக மகா பெரியவரின் ஆசிர்வாதம் கிடைத்தது. தற்போது இந்த கிரீடம் செய்வதற்கான ஆர்டரை இளைய மகனும், அதை செய்வதற்கான ஏற்பாடுகளை மூத்த மகனும் செய்தனர்.
ஆறு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு 34 கேரட்டில் 619 வைரங்கள், கொலம்பியாவில் இருந்து வரவழைத்த 140 கலர் ஸ்டோன்கள் கடைசல் வேலை செய்தும், எமரால்டு இன்கிரீமிங் செய்து, பக்தியுடன் ஆத்மார்த்தமாக பணியில் ஈடுபட்டு தயார் செய்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை ரங்கநாதருக்கு சாத்தப்படும் கிரீடத்தை செய்ய கிடைத்த வாய்ப்பு பெருமை. இந்த கிரீடத்தை இஸ்லாமிய பக்தர் ஒருவர் வேறு சிலரிடம் நன்கொடை பெற்றுக் கொடுத்ததாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் 3000க்கு மேற்பட்ட கடைகளும், திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட கடைகளும் இருக்கும் நிலையில் எங்களுக்கு கிரீடம் செய்ய கிடைத்த வாய்ப்பு, கொடுத்து வைத்ததாகவே கருதுகிறோம். அதனால் ரெங்கநாதருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கநாதருக்கு கிரீடம் செய்ய ஆர்டர் கிடைத்ததும் கோவிலுக்கு சென்று அளவீடுகள் செய்தோம். வித்தியாசமான முறையில் கிரீடம் இருக்க வேண்டும் என்று ஒரே ரத்தினக்கல்லால் கிரீடம் உருவாக்க வேண்டும் என்று மாற்றி யோசித்து, ஒரே ரத்தின கல் வாங்க முடிவு செய்து கொலம்பியா நாட்டிலிருந்து ரத்தின கல்லை வரவழைத்து அதில் நுணுக்கமான பூ வேலைப்பாடுகள் செய்து, வைரம், வைடூரியம், எமரால்ட் போன்றவைகளை வைத்து அலங்கரித்து பிரேமிங் செய்தோம்.
பொதுவாக தங்கம் வெள்ளி போன்றவற்றால் கிரீடங்கள் உருவாக்கப்படும். இந்த கிரீடத்தை ஒரே கல்லால் உருவாக்கி அதில் வைரங்கள் எமரால்டு ரூபி போன்றவற்றை பதித்துள்ளோம். ஆறு தொழிலாளர்கள் முயற்சி செய்து ஒரே ரத்தினக் கல்லில் கிரீடத்தை உருவாக்கி இருப்பது சிறப்பு எனப் பேசினார்.
முன்னதாக, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பனிடம் இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், பணியாளர்கள் முன்னிலையில் பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை ஶ்ரீநம்பெருமாளுக்கு சாற்ற இன்று ஒப்படைத்தனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.