/indian-express-tamil/media/media_files/2025/06/01/v0PDf37eOv03V8bAttPh.jpeg)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மருத்துவ அறிவியல் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு, மூளை நரம்பியல் தொடர்பான கனவுகள் குறித்து திருக்குறளில் வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது வியத்தகு ஆய்வுப் பொருளாகியுள்ளது என நரம்பியல் மருத்துவ நிபுணர் அலீம் தெரிவித்துள்ளார்.
திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற, மூளை நரம்பியல் ஆய்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் மற்றும் மூளை நரம்பியல் துறைத் தலைவருமான மருத்துவ நிபுணர் எம்.ஏ. அலீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது டாக்டர் அலீம் பேசியதாவது;
மனித வாழ்க்கையில் கனவு என்பது மிக முக்கியமான அம்சமாகி உள்ளது. அதாவது மூளை இயக்கத்தின் ஒருவித அதிர்வுகள் காரணமாக மூளையில் பதிந்துள்ள நினைவுக் குறிப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக கனவுகள் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு குறிப்புகள். ஆனால் மருத்துவ ஆய்வுகளுக்கு முன்பே சங்ககால நமது தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படைப்புகளில் கனவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், அகத்தியம், கலித்தொகை, ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை உள்ளிட்டவைகளில் மிகவும் அழகாக, காட்சிகளுடன் தொடர்புபடுத்தி கனவுகள் குறித்து குறிப்பிட்டிருப்பது நம்மை மட்டுமல்ல உலக மருத்துவத் துறையையே வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
நமது மூளையில் பதிவான நினைவுகளை தூக்கத்தின் போது வெளிப்படுத்தும் விதமாக, குறிப்பிட்டு கூறப்போனால் செயல்படுத்த முடியாத சில நிகழ்வுகளை கூட செயல்படுத்தியதாக காட்சிப்படுத்துவது கனவு. இது மருத்துவ ஆய்வுகளுக்கு பின்னர் வெளியிடப்பட்ட முடிவு. ஆனால் இவற்றுக்கு முன்பே கனவுகள் குறித்து தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் கூறப்படாத உலக விஷயங்களே கிடையாது என்பது உலகறிந்த விஷயம். இதில் கனவையும் விட்டு வைக்கவில்லை திருவள்ளுவர். கனவுக்கென, “கனவு நிலை அறிதல்” என தனி (122 ஆவது) அதிகாரமே படைத்துள்ளார். அதில் உள்ள பத்து பாடல்கள் மூலம் கனவு நிலை குறித்தும் மூளையில் நரம்பியல் செயல்பாடுகளால் ஏற்படும் அதிர்வலைகள், அவற்றால் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது கனவுகள்) குறித்தும் விவரிக்கிறார் திருவள்ளுவர். அதில் நினைவில் நடக்காததை கனவில் நடைபெறுவதாக திருவள்ளுவர் தெரிவித்திருப்பது மருத்துவ உலகில் மூளை நரம்பியல் துறையினரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தவிர மேலும் சில அதிகாரங்களில், குறிப்பாக காமத்துப்பாலில் சில அதிகாரங்களில் சில பாடல்களிலும் கனவு குறித்து குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். தூக்கத்தில் மொத்தம் ஆறு நிலைகள் உள்ளன, இதில் கண் அசைவற்ற நிலை, கண் அசையும் நிலை என இரு பிரிவுகள் உண்டு. கண் அசைவுகள் உள்ள நிலையிலான தூக்கத்தில் தான் தெளிவான மற்றும் வினோதமான கனவுகள் ஏற்படுகின்றன என்கின்றது மூளை நரம்பியல் துறை ஆய்வுகள். கண் அசைவு அல்லாத நிலையிலும் தொடர்ச்சியற்ற வகையிலான கனவுகள் ஏற்படுவதாகவும், விலங்குகளுக்கும் கனவுகள் ஏற்படுவதாகவும் அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. மூளை நரம்பில் அதிர்வலைகள் ஏற்படுவதால் காட்சி பிம்பங்கள் படம் போல் கனவுகளில் தென்படுகிறது. கண் அசைவுடன் கூடிய தூக்கத்தில் கனவுகள் வருவதை திருக்குறளில் 1211 ஆவது குறளிலும், கண் அசைவற்ற நிலையிலான தூக்கத்தில் வரும் கனவுகள் குறித்து அடுத்த 1212 ஆவது குறளிலும் என அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களிலும் திருவள்ளுவர் குறிப்பிட்டு இருப்பது மூளை நரம்பியல் துறை மருத்துவ ஆய்வுகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.
கனவுகள் மூலம் ஏற்படும் தொந்தரவுகள் தொடர்பாக நோய்கள் ஏற்படுவதும் மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. கனவு காணும் போது சிரிப்பது, அழுவது, உணர்ச்சி வசப்படுவது, அருகில் இருப்பவர்களை அடிப்பது, இடிப்பது என பல்வேறு வகையான தொந்தரவுகளும் ஏற்படுவது உண்டு. அதுபோல ஞாபகம் மறதி தொடர்பாக கனவுகள் ஏற்படுவது மூளை நரம்பியல் நோய்களுக்கான அறிகுறி எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கனவுகளின் அடிப்படையில் ஏற்படும் நோய்களின் வகைகள் குறித்தும் தற்போதைய மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும்.
மேலும் கனவுகளின் அடிப்படையில் எது மாதிரியான நோய்கள் வர வாய்ப்பு உள்ளன என்பதையும் கூற முடியும். மதுப்பழக்கம், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் உட்கொள்ளும் போது அவற்றின் மூலமாக சில வகையான கெட்ட கனவுகள் ஏற்படுவதும் உண்டு. கெட்ட கனவுகள் ஏற்படுவதை யாரும் விரும்புவதில்லை. எனவே, அவற்றுக்கான சிகிச்சை முறைகளும் மூளை நரம்பியல் துறையில் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக நமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களிலும் கனவுகள் குறித்த நம்பிக்கைகள் தொன்று தொட்டு இருந்து வருகின்றன. அதாவது கனவுகளின் மூலம் சில தகவல்கள் முன்கூட்டியே நமக்கு தெரிவிக்கப்படுவதாக அனைத்து மத நம்பிக்கைகளும் வலியுறுத்துகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக விலங்குகளும் கனவுகள் காண்கின்றன என்பதையும் சங்க கால நூல்கள் தெரிவித்துள்ளன. அந்தவகையில், அவை உண்மை என்பதையும் நிகழ்கால மறுத்து வாய்வுகள் உறுதி செய்துள்ளனர் இவ்வாறு டாக்டர் அலீம் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தமிழ் சங்க நிர்வாகி பெ. உதயகுமார் வரவேற்றார். முனைவர்கள் அ.சையத் சாகிர் அசன், சு. செயலாபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.