திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில், வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஹானஸ்ட் ஷாப் ஆளில்லா கடை திறக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் விமலா ஆளில்லா கடையினை திறந்து வைத்து பேசுகையில், வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், பென்சில், தாள்கள், புத்தகங்கள் உட்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் அசல் விலையுடன் அலமாரியில் அடுக்கப்பட்டு, அதன் அருகிலேயே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை மாணவர்களே எடுத்துக் கொண்டு அதற்கான விலையினை உண்டியலில் செலுத்தி விடும் வகையில் ஆளில்லா கடை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், கிளை நூலகர் புகழேந்தி, எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி குறித்து யோகா விஜயகுமார் நம்மிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், வித்தியாசமாக திருச்சியில் மாணவர்களுக்காக ஹானஸ்ட் ஷாப் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு நாள் அன்றே மாணவர்கள் ஆர்வமாக தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்குரிய பணத்தினை உண்டியலில் செலுத்தினர். அதேபோல், சரியான சில்லறையையும் எடுத்துக் கொண்டனர்.
நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியா உருவாக வேண்டும் என்று காந்தி கனவு கண்டார். அவர் கண்ட கனவினை நனவாக்கிட நேர்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது. நேர்மை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஹானஸ்ட் ஷாப் அமைக்கப் பட்டுள்ளது.
இதில் விற்பனையாகும் தொகை சேவை திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் சமூக ஆர்வலர் யோகா விஜயகுமார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“