/indian-express-tamil/media/media_files/TZ2XWU9bxr9EOVi8xuIV.jpg)
Trichy Srirangam Chithirai Car Festival
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கக்கூடிய திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. அதன் பின்னர் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் ஸ்ரீநம்பெருமாள் தேரோடும் வீதிகளில் உலா வந்தார்.
இதனை தொடர்ந்து ஏழாம் திருநாளான இம்மாதம் 4ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.
அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். எட்டாம் திருநாளான நேற்று அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்தபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீநம்பெருமாள் மேஷ லக்கனப்படி அதிகாலை 5.15 மணிக்கு திருதேரில் எழுந்தருளினார்.
/indian-express-tamil/media/media_files/oPhnigK8HKhVL0GF3phg.jpeg)
/indian-express-tamil/media/media_files/AaTZgbNe8VcmVoJxf6tC.jpeg)
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருதேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு சித்திரை வீதிகளை திருத்தேர் வலம் வந்தது.
நாளை 7-ம்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 8-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/4ohMOWtw4kJ6HcgeqDJ7.jpeg)
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us