108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிக மிக முக்கியமானதாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி பெருவிழா. இந்த விழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி துவங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆபரணங்களில் உற்சவர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபம் சென்றடைந்து பொதுமக்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
அந்த வகையில் பகல் 10 உற்சவத்தின் 9ம் நாளான இன்று (08.01.2025) காலை, ஸ்ரீ நம்பெருமாள் முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் - முத்து நேர் கிரீடம், முத்து அங்கி அணிந்து, மகாலக்ஷ்மி பதக்கம், தங்க பூண் பவழ மாலை, சந்திர ஹாரம், மகரி, 2 வட முத்து சரம், முத்து அபய ஹஸ்தம்; முத்து கடி அஸ்தம் (இடது திருக்கை) முத்து கர்ண பத்திரம், முத்து திருவடி அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதித்து வருகிறார்.
முன்னதாக, பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான நாளை ஒன்பதாம் தேதி ஸ்ரீ நம்பெருமாள் பெண் கோலம் பூண்டு மோகினி அலங்காரத்தில் நாளை காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, 7:00 மணிக்கு அர்ஜுன மண்டபம் சென்றடைந்து பொதுமக்களுக்கு சேவை சாதிக்கிறார். அரையர் சேவை முடிந்தவுடன் பின்னர் மாலை 5 மணிக்கு பகல் பத்து மண்டபத்திலிருந்து புறப்பாடாகி ஆரியபட்டாள் வாசல் அடைந்து, திரு கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு 7:00 மணிக்கு கருட மண்டபம் சென்றடைகிறார். நாளை மோகினி அலங்காரத்தை முன்னிட்டு மாலை நாலு முப்பது மணிக்கு மேல் மூலவர் முத்தங்கி சேவை கிடையாது. பின்னர் நாளை மறுதினம் அதிகாலை வைகுண்ட ஏகாதேசிக்கான புறப்பாடு நடைபெறும்.
நாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர் என்பதால் நாளையே போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சுமார் 2000 காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்ரீரங்கம் கோவில் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கசண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.