ஃபாக்ஸ்நட் அல்லது தாமரை விதைகள் என்று அழைக்கப்படும் மக்கானா, சமீப ஆண்டுகளில் சத்தான சிற்றுண்டியாக பிரபலமடைந்துள்ளது. இப்போது, ஃபாக்ஸ்நட் உற்பத்தி மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்த பீகாரில் மக்கானா வாரியத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Nirmala Sitharaman announces Makhana Board in Bihar; know the many benefits of foxnuts
மக்கானா பிரபலமடைந்தது எப்படி?
மக்கானாவை வறுத்து சாப்பிடும் போது அதன் சுவை சிறப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர். இதில் உப்பு, மிளகுத்தூள் போன்றவற்றை மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இது விருப்ப தேர்வாக அமைகிறது. இதில் சோடியம் அளவு குறைவாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கூட பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு இவை வலிமை சேர்க்கிறது. உடல் நலத்தில் ஆரோக்கியம் கொண்டவர்கள், இதனை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்கின்றனர்.
மக்கானாவை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
மக்கானாவை தனியாக உட்கொள்வதை விட பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது அவை கூடுதல் ஊட்டச்சத்து நன்மைகளை தருவதாக உணவியல் நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மக்கானா மற்றும் பாலில் அதிக கால்சியம் இருப்பதால் இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவை இரண்டிலும் புரதச் சத்தும் நிறைந்திருக்கிறது.
மக்கானா, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகவே உயர்த்துகிறது. மேலும், இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
"மக்கானாவில் மெக்னீஷியம், பொட்டஷியம், அன்டி ஆக்சிடென்ட்ஸ் இருக்கிறது. பாலில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி இருக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது, பல வகையான ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்கிறது" என கனிக்கா மல்ஹோத்ரா கூறுகிறார். எனினும், பால் பொருட்களில் ஒவ்வாமை இருப்பவர்கள் அவற்றை தவிர்ப்பது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.