/indian-express-tamil/media/media_files/2025/04/22/jpSAxUnv3Sr8rUHWyfpE.jpg)
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாடு செய்ய லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் குவிந்தனர். நீர் மோர் கொடுத்தும், அன்னதானம் வழங்கியும் உற்சாகமாய் வைத்தீஸ்வரன் கோவில் பொதுமக்கள் வரவேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல்நாயகி உடனுறை செல்வமுத்துக்குமாரசுவாமி அருள்பாலித்து வருகின்றனர். தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தக்கோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
வைத்தீஸ்வரன்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 2-வது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி, லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் நேற்று இரவு முதல் பாத யாத்திரையாக நடந்து வைத்தீஸ்வரன்கோயில் வந்த நிலையில், மாட்டுவண்டியில் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் கொண்டு வந்திருந்தனர்.
பழமை மாறாமல் இருப்பதற்காக பழங்காலத்தில் மேற்கொண்ட இந்த மாட்டு வண்டி பயணத்தை தொன்று தொட்டு இன்றும் செய்து வருகின்றனர். திருமயம், புதுக்கோட்டை, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன்கோவில் சென்றடைந்தனர்.
நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து புறப்பட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் 2-வது செவ்வாய்க்கிழமை இன்று வைத்தீஸ்வரன் கோயில் வந்து சேர்ந்தனர். நேற்று இரவு முழுவதும் வைத்தீஸ்வரன் கோவிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து இன்று அதிகாலை முதல் கோவிலுக்கு சென்று வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர்.
குலதெய்வ வழிபாடாகவும், அதே சமயம் ஸ்ரீ தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றியும், நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தாங்கள் வேண்டுதலுக்காகவும், வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய வேப்பிலை கட்டிய குச்சியினை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்தி, மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள் என்பதும், இந்த நாகரீக காலத்திலும் பழமை பண்பாடு மாறாத நகரத்தாரர்களின் வைத்தீஸ்வரன்கோயில் பயணம் காண்போருக்கு மகிழ்ச்சியாகவும் படிப்பினையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பழம், குடிப்பதற்கு தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் தன்னார்வலர்கள். லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மேற்பார்வையில், துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, காவல் ஆய்வாளர்கள் புயல் பாலசந்திரன், செல்வி, ராஜா, விசித்திரா மேரி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 4 வீதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வருவதற்காக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
அதேநேரம் லட்சக்கணக்கானோர் கூடும் வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு சில ரயில்கள் மட்டுமே நின்று செல்லும் நிலையில், அனைத்து விரைவு ரயில்களும் நின்று சென்றால் ரயில்வேக்கும் வருவாய், பொதுமக்களும் சிரமமின்றி எளிதில் பயணம் மேற்கொள்வர் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.