/indian-express-tamil/media/media_files/2025/08/21/vanitha-vijayakumar-2025-08-21-10-56-57.jpg)
Vanitha Vijayakumar Chandralekha movie
நடிகை வனிதா விஜயகுமாரின் திரையுலக அறிமுகம் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 'சந்திரலேகா'. 1995-ஆம் ஆண்டு வெளியான இப்படம், விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த முதல் திரைப்படம். இப்படத்தில், ஒரு பழமையான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக நடித்த வனிதா, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, விஜய் மற்றும் வனிதாவின் ஜோடிப் பொருத்தம், திரையில் அவர்களின் கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டன.
சமீபத்தில் சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 'சந்திரலேகா' படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை வனிதா பகிர்ந்து கொண்டார்.
'சந்திரலேகா' படத்துல ஒரு காட்சி... ரொம்ப உணர்ச்சிகரமான ஒரு சீன். படத்துல விஜய் ஒரு என்னை லவ் பண்றாங்க. ஆனா, எங்க அம்மா அப்பாவுக்கு அது பிடிக்கலை. அந்த நேரத்துல எங்க அம்மா அப்பாவோட கட்டாயத்துனால, நாங்க பிரிஞ்சு போற மாதிரி ஒரு சீன். அந்த காட்சியைப் பத்தி எங்க அம்மா கிட்ட கேட்டேன், "அம்மா, இந்த காட்சி எப்படி பண்ணனும்? எனக்கு புரியலையே... கிளிசரின் போட்டு ட்ரை பண்ணனுமா?"ன்னு கேட்டேன்.
அதுக்கு எங்க அம்மா, "நீ ரொம்ப சோகமான விஷயத்தை மனசுல நினைச்சுக்கோ. ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை நினைச்சா, உன் முகத்துல தானாகவே அந்த சோகம் வரும். அப்போ கிளிசரின் இல்லாமலே உன் கண்கள் கலங்கிடும்"னு சொன்னாங்க.
எங்க அம்மா என்ன எதிர்பார்த்தாங்கன்னா, "எங்க அம்மாக்கு ஏதோ ஆகிடுச்சு. அப்போ நீ எவ்வளவு சோகமா இருப்பியோ, அந்த சோகத்தை இந்த காட்சியில் வெளிப்படுத்து.. னு சொன்னாங்க..
நான் எங்க அம்மாவோட வார்த்தைகளைக் கேட்டுட்டு அந்த காட்சியில் நடிக்க போனேன். எனக்கு என் நிஜ வாழ்க்கையில, அம்மா அப்பாவால ஒரு பிரிவினை வந்துச்சுன்னா நான் எப்படி இருப்பேன்னு யோசிச்சேன். உடனே எனக்கு, நான் விஜய்யை காதலிக்கிறதாகவும், அதை எங்க அம்மா அப்பா பிரிச்சதாகவும் நினைச்சேன். இதை நினைச்ச உடனே, என் மனசு ரொம்ப கனமாச்சு. சும்மாவே எந்த காரணமும் இல்லாம எங்க அம்மா என்னை பிடிச்சு பிடிச்சு மிதிப்பாங்க. இந்த ஒரு விஷயம் எனக்குள்ள அந்த நேரத்துல வந்துச்சு பாருங்க.
அந்த காட்சியில், நான் விஜய்யை கட்டி பிடிச்சு விழுற மாதிரி ஒரு ஷாட் இருந்துச்சு. அந்த நேரத்துல நான் நிஜமாவே விஜய்யை காதலிச்சதாகவும், அவரை என் வாழ்க்கையிலிருந்து பிரிஞ்சிட்டேன் அப்படின்னும் நினைச்சுக்கிட்டேன். அந்த காட்சியில் நான் அவரை இறுக்கமாக பிடிச்சுக்கிட்டேன். அந்த ஷாட் முடிஞ்சதும் நான் வந்து ஒரு ஓரமா உட்கார்ந்துட்டேன். என்கிட்ட யாரும் பேசல. என் மனசுல அந்த சோகம் அப்படியே இருந்தது.
அம்மாவே வந்து கேட்டாங்க, "என்ன இவ்வளவு சோகமா இருக்க? ஷாட் முடிஞ்சிருச்சுல" அப்படின்னு. அந்த ஷாட் எடுத்த அந்த நாள், நான் நிஜமாவே விஜய்யை காதலிச்சிட்டேன்னு எனக்குள்ளேயே ஒரு எண்ணம் வந்துருச்சு. ஏன்னா, நான் அந்தளவுக்கு அந்த பாத்திரமா மாறி, அந்த சோகத்தை உணர்ந்தேன். அதுதான், ஒரு நடிகையா எனக்குள்ள ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு”, என்று வனிதா விஜயகுமார் அந்த பேட்டியில் பேசினார்.
இன்று வனிதா விஜயகுமார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தயாரிப்பு மற்றும் பிற துறைகளில் தனது ஆளுமையைக் காட்டினாலும், 'சந்திரலேகா' என்ற திரைப்படம்தான் அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு மறக்க முடியாத படைப்பாக என்றும் நிலைத்து நிற்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.