தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர், வியட்நாம் நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பாக, வியட்நாம் நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார்.
அப்போது அவருடன் பணியாற்றிய வியட்நாம் பெண் நுகின் லீ தய் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாகி மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்த நிலையில், தங்கள் காதல் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற மகேஷின் தங்கையின் திருமணத்திற்கு நுகின் லீ தய் வந்துள்ளார்.
தமிழ் பாரம்பரிய திருமண முறை அவருக்கு பிடித்துப்போக, ஒரே வாரத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.
இதனை அடுத்து இன்று திருநெல்வேலியில் இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி சிறப்பாக நடந்து முடிந்தது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மணமகள் தரப்பில் அவரது தயார் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
க.சண்முகவடிவேல்