விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50வது திரைப்படம் ’மகாராஜா’. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
இந்த நிலையில் துபாயில் உள்ள மிக உயரமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் துபாய் சென்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய துபாய் வாழ்க்கை குறித்து பேசிய வீடியோ இப்போது பலரையும் உருக வைத்துள்ளது.
“இது நான் சொல்லி சொல்லி சலிச்சுப் போன கதையா இருந்தாலும் கேட்கிறதுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும். நான் ஒரு சிமெண்ட் கம்பெனியில அக்கவுன்டன்டா வேலை பாத்துட்டு இருந்தேன். மாசம் 3,500 ரூபாய் சம்பளம். அப்போ துபாய்ல இரோஸ்டார் கம்பெனியில வேலைக்கு கேட்கிறாங்க, அங்க 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவாங்கனு ஃபிரெண்ட் சொன்னாங்க. அதாவது 1000 திர்ஹம்ஸ்.
என்கிட்ட அப்போ பாஸ்போர்ட் இல்ல. நான் பாஸ்போர்ட் எடுக்க அப்ளை பண்ணியிருந்தேன். ஆனா எனக்கு 10 நாள்ல போகணும் சொல்லிட்டாங்க. ஏரியா கவுன்சிலரை பாக்கணும், காசு கொடுக்கணும் சொன்னாங்க. என்கிட்ட சுத்தமா காசு இல்ல. அப்போ நானே என்னோட டிகிரி சர்டிபிகேட், ரேஷன் கார்டு, கான்டக்ட் சர்டிபிகேட் எடுத்துட்டு நேரா கமிஷனர் ஆஃபிஸ் போயிட்டேன்.
அங்க ஒரு நல்ல மனுஷன் இருந்தாரு. அவர்கிட்ட இதெல்லாம் காமிச்சு, ”சார் குடும்ப சூழல்னால வேலைக்கு போறேன், எனக்கு இந்த மாதிரி கேட்கிறாங்க, சீக்கிரம் போணும் சார்” சொன்னேன். அங்க நிறைய பாஸ்போர்ட் அப்ளிகேஷன் வந்துருந்தது. நல்ல நேரம் அவர், அதுல என்னோட பாஸ்போர்ட் அப்ளிகேஷன் எடுத்துட்டு, அடுத்த நாள் எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன் போக சொன்னாரு.
போலீஸ் ஸ்டேஷன் போனப்போ அங்க எங்கிட்ட, உங்களுக்கு கமிஷனர் ஆஃபிஸ்ல ஆள் தெரியுமானு கேட்டாங்க. எனக்கு யாரையும் தெரியாது. ஆனா எனக்காக அவர் கால் பண்ணி சொல்லிருக்காரு. பாஸ்போர்ட் கிடைச்சது. நான் வாங்கிட்டு ஊருக்கு போனேன். ஒரு கவர் கொடுத்தாங்க. பட்டேல் ஒரு தாத்தா வந்து கூட்டிட்டு போவாரு சொல்லிட்டாங்க. அவருக்கு 75 வயசு எனக்கு அப்போ 21 வயசு.
அவர் வந்து என்னை கூட்டிட்டு போனாரு. இங்க வந்தா பாலைவனத்துல மழை பெய்யுது. நம்ம துபாய்ல பெரிய ஆளாக போறோம்னு நினைச்சு கனவுகளோட நான் போறேன். அங்க இருந்து ஒரு 15-20 நிமிஷத்துல என்னோட ரூம். 6*3ல ஒரு பெட் கொடுத்தாங்க. அப்புறம் நேரா கோயிலுக்கு கூட்டிட்டு போனாங்க.
அப்புறம் என்னோட ஆஃபிசுக்கு போயி முதலாளியை பாத்தேன். நான் சம்பாதிச்ச பணம் குடும்ப சூழ்நிலைக்கு ஓரளவு வசதியா இருந்தது. ஆனா நான் நினைச்ச அளவுக்கு வாழ்க்கை மாறல. மாசம் 10,000 ரூபாய் வீட்டுக்கு அனுப்புனேன். 20 வயசுல ஏதாவது சாதிக்க மாட்டாமோ, குடும்பத்தை எப்படியாவது மேல கொண்டு வந்துர மாட்டோமானு ஒரு கனவு இருக்கும். ஏக்கம் இருக்கும். அந்த சமயத்துல நான் சுத்துன தெருக்கள், துபாயோட தெருக்கள், அங்கதான் சுத்திருக்கேன். எதையாவது பண்ண மாட்டாமோன்னு ஏங்கிருக்கேன்.
அங்க ஒரு vending machine இருக்கும். காசு போட்டா அதுல இருந்து கூல்டிரிங்க்ஸ் வரும். ஒரு திர்ஹம் வச்சுட்டு இதை செலவு பண்ணலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு இருந்தேன். அங்க இருந்த என்னை மாதிரி பலபேரோட நிலைமை இதுதான். ஏன்னா காசு செலவை பண்ணா வீட்டுக்கு அனுப்ப முடியாது. அங்க கொண்டாட்டம்லாம் கிடையாது. வியாழக்கிழமை ஆனா எல்லாரும் ஒன்னா சேர்ந்து பிரியாணி சமைச்சு சாப்பிட்டு, துணி எல்லாம் துவைச்சு காயப்போடுவோம்.
ரூம் சுத்தம் பண்றது, சமைக்கிறது, பாத்ரூம் கழுவுறது இவ்ளோதான் வாழ்க்கை. இதை தாண்டி கனவு காண கூட நேரம் இருக்காது. இப்போ 10 வருஷம் கழிச்சு திரும்பி அந்த இடத்துல பாக்கும் போது, நான் அங்க ஏக்கத்தோட சுத்துன, அந்த ஞாபகங்கள் தான் எனக்கு வந்தது தவிர, மத்த எதுவும் எனக்கு பெரிசா தெரியவே இல்ல, இப்படி விஜய் சேதுபதி பல நினைவுகளை அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“