விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழ்வாய்வில் சங்கு வளையல் மற்றும் பெரிய கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம்,வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் உள்ள தொல்லியல் மேட்டில் பழங்கால தமிழர்களின் பாரம்பரியத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், வட்டச்சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3020 பொருட்கள் கிடைத்துள்ளன.
அவை அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது தோண்டப்பட்ட குழியில் சங்கு வளையல் மற்றும் பெரிய கண்ணாடி மணி கிடைத்துள்ளன.
இது குறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி தெரிவிக்கையில், நம் முன்னோர், வட மாநிலங்களில் இருந்து சங்குகளை பெற்று வளையல்களை தயாரித்துள்ளனர் என்றும் அதில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அலங்காரம் செய்துள்ளனர் என்பதும் தற்போது நடத்திவரும் அகழாய்வின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் நடக்கும் அகழாய்வில் இன்னும் இதுபோன்ற பொருட்கள் தென்படவும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.