விஜய்டிவியின் ராஜா ராணி2 சீரியலில் ஸ்டிரிக்ட்டான மாமியாராக நடித்து வருபவர் சிவகாமி. இவரது நிஜப் பெயர் பிரவீனா நாயர். கேரள மாநிலம் செங்கணசேரியில் பிறந்தவர். மலையாளத்தில் பிரபலமான நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட். அப்பா கல்லூரி பேராசிரியர். பிரவீனா 18 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற படம் மூலம் அறிமுகமானார். தூர்தஷன் நிகழ்ச்சியான ஸ்வப்த ஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து ராஜதந்திரம், கலியூஞ்சல்,அக்னிசாட்சி, இங்கிலீஷ் மீடியம், வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும், ஸ்வர்ணம், மயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
மலையாள சினிமாவில் அனில் பாபுவின் கலியூஞ்சல் படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஓரல் மாத்திரம் தி ட்ரூத் மற்றும் எழுப்புண்ணா தரகன் ஆகிய படங்களில், மம்மூட்டியின் சகோதரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரவீணா. சினிமாவில் நடித்துக்கொண்டே சின்னத்திரையிலும் அறிமுகமானார் பிரவீனா. மலையாளத்தில் ஸ்வப்னம், மேகம் தி மவுனம், மழவில் மனோரமாவில் மலக்கமர் மற்றும் மொக்கக்கடல் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். கைராலி டிவியில் மம்மி & மீ, ஆசியநெட்டில் நகைச்சுவை நட்சத்திரங்கள் மற்றும் ஸ்டார் சிங்கர் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துள்ளார்.
இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. என்டே வீடு அப்புவின்டேயும் படத்தில் ஜோதிர்மயிக்கும், காவ்யா மாதவன், பத்மபிரியா, மனிஷா கொய்ராலா போன்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். கேரள மாநில திரைப்பட விருதை நான்கு முறை வென்றுள்ளார். 1998 ஆம் ஆண்டில், அக்னிசாட்சியில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். 2008 இல் ஒரு பெண்ணும் இரண்டானும் படத்தில் நடித்தற்காக அதே விருதை வென்றார். 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், முறையே எலெக்ட்ரா மற்றும் இவான் மகரூபனுக்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.
தமிழ் சின்னத்திரையில் முதன்முதலில் கலைஞர் டிவியின் நம்ம குடும்பம் தொடர் மூலம் தான் அறிமுகமானார். அதன்பிறகு விஜய்டிவி, சன்டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். மகாராணி, ஆதி பராசக்தி, பிரியமானவளே, மகராசி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சன்டிவியின் பிரியமானவளே சீரியலில் இவர் நடித்திருந்தது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது ராஜா ராணி2 சீரியலில் ஆலியா மானசாவின் மாமியாராக சிவகாமி கேரக்டரில் நடித்து வருகிறார்.
சரவணனுக்கு பாசமான அம்மாவாக நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார் பிரவீணா. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, வெற்றிவேல் ரீசன்ட்டாக வெளியான டெடி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவருடன் திருமணம் ஆனது. தற்போது லேட்டஸ்டாக தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் எஸ்விசி 50 படத்திலும் நடித்துள்ளார். பல மொழி திரைப்படங்களிலும், சீரியல்களில் நடித்து பிசி நடிகையாக வலம் வருகிறார் பிரவீனா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil