கோடை விடுமுறை முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், குழந்தைகளை எங்கும் அழைத்துசெல்லவில்லை என்று நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், அதை தீர்க்கும் வகையில் அருமையான பல பேக்கேஜுகளைத் தஞ்சாவூர் சுற்றுலா மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் வந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்த படியாக, அதே கதையில் நடக்கும் இடங்களை எல்லாம் நேரில் , இப்போது எப்படி இருக்கிறது என்று சுற்றி பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலா மேம்பாட்டு கழகம் அருமையான ஒரு சுற்றுலா பேக்கேஜ்ஜை கொண்டு வந்துள்ளது. அதன் பெயர் "சுவடுகளைத் தேடி - வந்தியத் தேவன் பாதையில் ஒரு நாள் பயணம்". இந்த பேக்கேஜ் மூலம் என்ன இடங்களை எல்லாம் பார்க்கலாம், எவ்வளவு செலவாகும் என்று இந்தப் பதிவில் காணலாம்.
என்ன இடங்களை எல்லாம் பார்க்கலாம்? இந்த சுற்றுலா பேக்கேஜ் ஆனது தஞ்சையில் இருந்து தொடங்கி வீராணம் ஏரி, உடையார்குடி, கடம்பூர், திருபுரம்பியம், நாதன் கோவில், பழையாறை, உடையாளூர், தஞ்சை பெரிய கோயில் ஆகிய இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும்.
ஏசி பேருந்து மூலம் உங்களை இந்த 10 இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் காலையில் தொடங்கி இரவு வரை இருக்கும் இந்த பயணத்தின் மதிய மற்றும் இரவு உணவுகள் உங்களுக்கு பரிமாறப்படும். அதனுடன், சோழ வம்சம் குறித்த கதைகளையும் இந்த சுற்றுலா தளங்களின் முக்கியத்துவத்தையும் உங்களுக்கு நிபுணர்கள் விளக்குவார்கள். இந்த பயண பேக்கேஜ் ஆனது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அடங்கிய பயணமாக அமையும்.
சோழர்களின் கதையைச் சொல்லும் பொன்னியின் செல்வனின் முக்கிய இடங்களை காட்டும் பெரிய பயணமாக இருக்கிறது. இதற்கு அதிக செலவாகும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. தஞ்சை சுற்றுலா மேம்பாட்டு துறை அனைவருக்கும் இந்த பயணத்தை சிறப்பிக்கும் வகையில் 2000 ரூபாயில் இந்த பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
எப்படி பதிவு செய்வது?நீங்களும் பொன்னியின் செல்வனின் சுவடுகளை தேடி- வந்தியத் தேவன் பாதையில் ஒரு நாள் பயணம் மேற்கொள்ள நினைத்தால்,
https://thanjavurtourism.org/registration/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக உங்கள் சுற்றுலாவை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94891 29765 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.