இனிமே நடைபயிற்சியின் போது இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்
தினமும் நடைபயிற்சியின் போது நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், நடைபயிற்சியினால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்தும் இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தினமும் நடைபயிற்சியின் போது நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், நடைபயிற்சியினால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்தும் இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
நடைபயிற்சி என்பது பெரும்பாலும் எல்லோராலும் எளிதாக செய்யக் கூடிய விஷயம். இதனை தொடர்ந்து செய்வதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக, குறைந்தது 30 நிமிடங்கள் நடப்பது, இதயத் துடிப்பை சீராக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
Advertisment
இது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. நடைபயிற்சி கலோரிகளை குறைக்க உதவுகிறது. சீரான நடைபயிற்சி அதிகப்படியான உடல் எடையைக் குறைத்து, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது உடல் பருமன் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நடைபயிற்சி ஒரு சிறந்த மருந்தாகும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. சீரான நடைபயிற்சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
நடைபயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய நன்மைகள் அளிக்கக் கூடிய நடைபயிற்சியின் போது நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் குறித்து மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். இது குறித்த தகவல்களை டெய்ஸி ஹாஸ்பிடல் யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அந்த வகையில், நடைபயிற்சி மேற்கொள்ளும் போது நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். பலரும் கீழே பார்த்துக் கொண்டு நடக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்யும் போது முதுகு வலி ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனை தடுக்க அனைவரும் நிமிர்ந்து நேராக பார்த்து நடக்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்பாக கட்டாயம் சாப்பிட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஏனெனில், வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு நடைபயிற்சி செய்யும் போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடைய நேரிடும். இதைத் தடுக்க, கொத்தமல்லி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ் போன்றவற்றை குடித்து நடைபயிற்சி செய்யலாம் என்று மருத்துவர் ஷர்மிகா வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற விஷயங்களை பின்பற்றும் போது நடைபயிற்சியின் முழுமையான பலனும் நமக்கு சரியான முறையில் கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.