Advertisment

கீழூர் வாக்கெடுப்பு, இந்தியா - பிரெஞ்சு ஒப்பந்தம்... ஆக.16 புதுச்சேரியில் அரசு விடுமுறை ஏன் தெரியுமா?

1962-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நேருவும், பிரெஞ்சு தூதரும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். 1962 ஆகஸ்டு மாதம் விடுதலையை குறிக்கும் வகையில்புதுவையில் மூவர்ண தேசியக்கொடியேற்றப்பட்டது.

author-image
WebDesk
New Update
 why puducherry august 16 holiday De Jure Transfer Day 2024 Tamil News

பிரெஞ்சுக் காரர்களிடமிருந்து, 1954 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுச்சேரி விடுதலை அடைந்தது.

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Advertisment

மக்கள் பிரதிநிதிகளில் 170 பேர் இந்தியாவோடு இணைய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.  8 பேர் மட்டுமே எதிராக  வாக்களித்தனர். இதனால் புதுச்சேரி மாநிலம் பிரான்ஸ் நாடுடன் இணையாமல் போனது. இந்த இடத்தில் இன்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம்  தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். 

புதுச்சேரியின் வரலாறு என்பது மிகவும் தொன்மையானது. சுமார் 300 ஆண்டுகள் இந்த புண்ணியபூமி பிரெஞ்சுக்காரர்களால் ஆளப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் புதுச்சேரியிலும் சுதந்திர தாகம் தலைதூக்கியது. மக்கள் தாமாகவே முன்வந்து ஆங்காங்கே பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து போராடினார்கள். 

1954-ம் ஆண்டு இந்த போராட்டங்கள் தீவிரமானது. இதற்கு தாக்குப்பிடிக்கமுடியாமல் பிரெஞ்சு அரசும் புதுச்சேரிக்கு சுதந்திரம் வழங்க முடிவெடுத்தது. இதன்விளைவாக இந்த போராட்டங்கள் 1954-ம் ஆண்டு கீழுரில் நடந்த பிரதிநிகள் வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தன.

அந்த வாக்கெடுப்பின்போது மக்கள் பிரதி நிதிகளில் 170 பேர் இந்தியாவோடு இணைய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 8 பேர் மட்டுமே எதிராக வாக்களித்தனர். அதன்பின்  அக்டோபர் மாதம் 21-ம் நாள் பிரெஞ்சு பிரதிநிதி பியர் லாந்தி, இந்திய பிரதிநிதி கேவல் சிங் ஆகியோர் நிர்வாக மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் எதிரொலியாக 1954-ம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி சுதந்திரம் அடைந்தது. பிரெஞ்சு ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்தாலும் சட்டப்பூர்வமான அதிகார மாற்றத்துக்காக 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இருநாட்டு அரசுகளும் 1956 மே 28-ல் அதிகார மாற்று ஒப்பந்தம் செய்துகொண்டாலும் அதை அங்கீகரிக்க பிரெஞ்சு பாராளுமன்றம் காலம் தாழ்த்தியது. 

அதன்பின், 1962-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நேருவும், பிரெஞ்சு தூதரும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதைத்தொடர்ந்து 1962 ஆகஸ்டு மாதம் விடுதலையை குறிக்கும் வகையில்புதுவையில் மூவர்ண தேசியக்கொடியேற்றப்பட்டது. 

இதற்கிடையே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வரவு-செலவு 1-11-1954 முதல் 30-6-1963 வரை இந்திய அரசின் வெளியுறவு விவகார அமைச்சகத்தின்வரவு செலவில் சேர்க்கப்பட்டிருந்தது. 1963-ம் ஆண்டு சட்டசபை உருவாக்கப்பட்டு புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963 நடைமுறைக்கு வந்தது. 1-7-1963 முதல் 31-3-1964 வரைக்குமான பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட் டது.

கீழூர் வாக்கெடுப்பு நடந்த இடத்தில் இப்போது நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நூலகம் மற்றும் வாக்கெடுப்பு குறித்த புகைப்பட காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு 16-ந்தேதி தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. அன்று அரசு விடுமுறையாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதனால் 15, 16, ஆகிய இரு தேதிகள் விடுமுறை தினமாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

விடுதலைக்கு பின்பு புதுச்சேரி

பிரெஞ்சுக் காரர்களிடமிருந்து, 1954 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுச்சேரி விடுதலை அடைந்தது. நீண்ட போராட்டத்துக்குப்பின் கிடைத்த பரிசாக விடுதலையை மக்கள் திரள்திரளாகத் திரண்டு,  நாட்டுப் பண் பாடி, கொடியேற்றி ஆர்ப்பரித்தனர். பிரெஞ்சு பண்பாட்டில் அதுவரை, திளைத்திருந்த  புதுச்சேரி முதல்முறையாக இந்திய பண்பாட்டை நோக்கி பயணப்பட்டது.

விடுதலைக்குப் பின்னர் புதுச்சேரியை ஆட்சி செய்ய, இந்திய அரசு கேவல்சிங் என்பவரை ஆளுநராக நியமித்தது. புதுச்சேரியில் முத்தியால்பேட், குருசுகுப்பம், ராஜ்பவன், காசுக்கடை, புஸ்சி, உப்பளம், முருங்கப்பாக்கம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கரையாம்புத்தூர், பாகூர், நெட்டப்பாக்கம், ஏம்பலம், மண்ணாடிப்பட்டு, சுத்துக்கேணி, ஊசுடு, வில்லியனூர், காலாப்பட்டு, லாசுப்பேட்டை, உழவர்கரை, ரெட்டியார்பாளையம் போன்ற 22 பகுதிகள் புதுச்சேரியிலும், கோட்டுச்சேரி, திருமேனி அழகர் கோட்டுச்சேரி, காரைக்கால் (தெற்கு), காரைக்கால் (மத்தி), காரைக்கால் (வடக்கு). காரைக்கோயில்பத்து, திருமலைராயன்பட்டினம் (வடக்கு), திருமலைராயன்பட்டினம், நிரவி, சனீஸ்வரன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், நெடுங்காடு போன்ற 12 பகுதிகள் காரைக்காலிலும், பள்ளூர், பந்தக்கல், மாகே போன்ற பகுதிகள் மாகேயில் இருந்தும், அதியந்திரப்பேட்டை, கனகலாபேட் போன்ற பகுதிகள் ஏனாம் பகுதியில் இருந்தும் பிரதிநிதிகள் சபைக்கான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

ஆளுநர் கேவல்சிங் மேற்பார்வையில்,1984-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் நாள் பிரதிநிதிகள் சபைக்கு 39 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. விடுதலைக்குப் பின்னர் முதன்முறையாக நடைபெற்ற இத்தேர்தலில், இந்தியக்குடியுரிமை பெற்றோரும், பிரெஞ்சுக்குடியுரிமைப் பெற்றோரும் வாக்களித்தனர்.

மொத்தம் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்த இத்தேர்தலில் மொத்தம் 39 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வ.சுப்பையா தலைமையிலான மக்கள் முன்னணி 22 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருந்த நிலையில், 3 உறுப்பினர்கள் மாகி புருசோத்தமன், அருள்ராஜ் மற்றும் முகமது யூசுப் (காரை) கட்சி மாறியதால் 17 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் புதுச்சேரி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

புதுச்சேரியின் பிரதிநிதிகள் சபையின் முதல் தலைவராக காரைக்கோவில்பத்தில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட ஏ.எஸ்.பக்கிரி சாமிப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவரது மறைவுக்குப்பின் 1956-ம் ஆண்டு எதுவார் குபேர் சபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1959-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசே ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. ஆளுநராக கேவல்சில் தலைமையில், புதுச்சேரி நிர்வாகம் நடந்து கொண்டிருந்த வேளையில், 1962-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 16-ம் நாள் பிரெஞ்சு அரசு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதி களை இந்திய அரசுடன் இணைத்து முறைப்படியான ஆவண மாற்றம் செய்து கொடுத்தது.

அதுவரை, கேவல்சிங்கை ஆளுநராகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரதிநிதிகள் சபை ஆவண மாற்றத்திற்குப் பிறகு சட்டப்போவையாக மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட சட்ட சபைக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்படவில்லை. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களே சட்டப்பேரவை உறுப்பினர்களாக 1964-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ம் நாள் வரை தொடர்ந்து செயல்படுவார்கள் என்று அறிவிக் கப்பட்டது. 

அதுவரை, 39 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபை 30 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை தொகுதிகளாக மாற்றப்பட்டு, முதல் சட்டப்பேரவை தேர்தல் 1964-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி முதல் 23-ந் தேதிவரை நடத்தப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் 21 தொகுதிகளும், காரைக்காவில் 6 தொகுதிகளும், மாகேயில் 2 தொகுதிகளும் மற்றும் ஏனாமில் 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டது. 

புதுச்சேரியின் முதல் முதலமைச்சராக  ஏதுவார் குபேர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் சட்டப்பேரவை அமைச்சரவை மொத்தம் 6 பேர் கொண்டதாக விளங்கியது. அதில்,  வெங்கட சுப்பா ரெட்டியார், குருசாமி பிள்ளை, முகமது இஸ்மாயில், ஜீவரத்தின உடையார் மற்றும் வரதப்பிள்ளை போன்றோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Puducherry Independence Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment