உலக ஆட்டிச தினத்தை முன்னிட்டு, கோவையில் ஆட்டிசம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், ஓவியம், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் போட்டிகளில் நாங்களும் சலித்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சங்கர் வானவராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் சிறப்பு குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம், இந்த வருடம் சாதாரண குழந்தைகளையும், ஆட்டிசம் பாதித்த சிறப்பு குழந்தைகளுடன் போட்டியில் இடம் பெற செய்துள்ளோம்.
ஆட்டிச பாதித்த குழந்தைகளை கவனித்து அதற்கு ஏற்ப முறையான பயிற்சி கொடுத்தால், சில வருடங்களிலேயே அவர்களை இயல்பான குழந்தைகளாக மாற்றலாம்.
உடல் இயக்க பயிற்சிகளும், சீரான பேச்சு பயிற்சியும் கொடுப்பதால், பேச சிரமப்படும் குழந்தைகள் விரைவிலேயே பேசுவதாகவும், மேலும் சிந்தித்தல் குறைபாடு உள்ளவர்களும், விரைவிலேயே நலம் பெறுவதாகவும் தீபா கூறினார்.
மேலும் ஆட்டிசம் குறைபாட்டை சீராக்க தற்போது பல மருத்துவ பயிற்சிகளும், செயல் விளக்க பயிற்சி முறைகளும் வந்துவிட்டன. அதனால் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் சில வருட பயிற்சியிலேயே சாதாரண இயல்பு உடைய குழந்தைகளை போல பேசவும், பழகவும் முடிவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்
விழாவில் சிறப்பு குழந்தைகள் பாடல் இசையுடன் ஆடி பாடி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அவர்களை பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.