உலக முழுவதும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளிடம் பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம், அனைத்து ரயில் நிலையங்களிலும் மற்றும் ரயில்வே குடியிருப்புகளிலும் மே 22 முதல் ஜூன் 5 வரை மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து எவர்சில்வர் அல்லது மறு சுழற்சிக்கு தகுதியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், டிபன் பாக்ஸ், மூங்கில் பல்துலக்கி, வேப்ப மரத்தில் செய்யப்பட்ட சீப்பு போன்றவற்றை உபயோகிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்கள் மற்றும் சுவரொட்டி விளம்பரங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மறு சுழற்சி முயற்சிகள், கழிவு மேலாண்மை போன்றவை குறித்தும் ரயில்வே ஊழியர்களிடமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை ஆகியவற்றிற்கு தனித்தனியாக குப்பை தொட்டிகள் வைப்பது, தூய்மை பணியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேசிய சமூக சேவை இயக்க மாணவர்களை ஈடுபடுத்துவது போன்றவை இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
ரயில் பயணிகளை சொந்தமாக தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள மற்றும் சாப்பிடுவதற்கு மரத்திலான தட்டு, கரண்டி ஆகியவற்றை பயன்படுத்த ஊக்கப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. வீதி நாடகங்கள் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்களுடன் கலந்துரையாடல், கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலையத்தில் பொது நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் டிவிஎஸ் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் தன்னார்வ தொண்டாக தூய்மை பணியில் ஈடுபட்டனர். 20 சாக்குகளில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை சேகரித்து ரயில்வே நிலைய நடைமேடைகள், ரயில் பாதைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தினர்.