சென்னை ஆழ்வார்பேட்டையில் பழைய உத்தகங்களை கிலோ கணக்கில் விற்பனை செய்யும் புதிய முறையிலான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் புத்தகங்களை எடைபோட்டு வாங்கிச் செல்ல பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னையில் டிசம்பர் மாதம் என்றாலே கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், சபா நிகழ்ச்சிகள், கேட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சிகள் என்பதே பலரின் நினைவுக்கு வரும். அதே போல, புத்தகப் பிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் நினைவுக்கு வருவது புத்தகக் கண்காட்சிதான்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்னோட்டமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் ஒரு கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் உள்ள சங்கரா ஹாலில், எடை கணக்கில் புத்தகங்கள் விற்பனை செய்யும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட பழைய ஆங்கில புத்தகங்கள், விற்பனையில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தக் கண்காட்சியில் என்ன சிறப்பு என்றால் வாசகர்கள் புத்தகத்தின் விலைக்கு பதிலாக புத்தகங்களை கிலோ கணக்கில் எடை போட்டு வாங்கிச் செல்லலாம். இந்த புத்தகக் கண்காட்சி காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி, வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. வாசர்கர்கள், பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களை எடை போட்டு எடைக்கு ஏற்ப பணம் பெற்றுக்கொண்டு புத்தகங்களை விற்பனை செய்கின்றனர்.
கதை, இலக்கிய புத்தகங்கள் கிலோ 100 ரூபாய்க்கும், குழந்தைகளுக்கான வண்ணப்படம் மற்றும் கதையல்லாத புத்தகங்கள் கிலோ 300 ரூபாய்க்கும் குழந்தைகள் பாட புத்தகங்கள் கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆழ்வார்பேட்டை கண்காட்சியில் நூதன முறையில் புத்தகங்கள் கிலோ கணக்கில் எடைபோட்டு விற்பனை செய்யப்படுவதால் வாசகர்கள் புத்தகங்களை வாங்க குவிந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil