Advertisment

இலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.

அக்கடலின் ஆழத்தை விட பன்மடங்கு ஆழமானது பெண்களின் மனம். பெண்களின் மனதை மிகவும் மென்மையானது என்று இலக்கியங்கள் வருணிக்கின்றன. இந்த மென்மையான மனம் எப்படிப்பட்டது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.

முனைவர் கமல. செல்வராஜ்.

Advertisment

பொதுவாக இவ்வையகத்தில் மிகவும் ஆழமானது கடல். அக்கடலின் ஆழம் என்ன என்பதை இன்றளவும் யாவராலும் அறிதியிட்டு உரைக்க இயலவில்லை என்பார்கள்.

அக்கடலின் ஆழத்தை விட பன்மடங்கு ஆழமானது பெண்களின் மனம். பெண்களின் மனதை மிகவும் மென்மையானது என்று இலக்கியங்கள் வருணிக்கின்றன. இந்த மென்மையான மனம் எப்படிப்பட்டது? அது எந்த சூழ்நிலையில் எப்படி சிந்திக்கிறது? எப்படி செயல்படுகிறது? என்பதை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலம்பில், இளங்கோ தெளிவு படுத்துகிறார்.

கண்ணகியின் கணவன் கோவலன், ஆடலரசி மாதவியின் நடனத்தின் நயத்தில், தன் இதயத்தை அவளிடத்தில் இழந்து விட்டான். அதனால் இதுவரையிலும் தன்னுடன் இணை பிரியாது, ஈருடல் ஓருயிராக வாழ்ந்து வந்த கணவன் கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியை மணந்து, அவளுடன் இல்லறம் நடத்தத் தொடங்கினான்.

தன் அன்பு கணவன் தன்னை விட்டுப் பிரிந்துச் சென்றதால் கண்ணகி, சொல்லி மாளாதத் துயரத்திற்கு ஆளானாள். அதனால் ஊணும் உறக்கமுமின்றி, ஆடை அலங்காரம் ஏதுமின்றி, தோழியரைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து தனிமையின் துயரத்தில் துடித்திருந்தாள்.

தன் தோழி கண்ணகி, அவளது எல்லா இன்பங்களையும் துறந்து, வாழ்க்கையே சூனியமாகி விட்ட நிலையில் இருக்கின்றாள், என்பதை உணர்ந்த அவளது தோழி தேவந்தி, அவளிடம் கூறுகிறாள், “நீ கணவனுக்கு வேண்டாதவளல்ல. ஆனால் நீ முற்பிறவியில் ஒரு நோன்பினைச் செய்யாமல் பிழைத்துள்ளாய். அதனால்தான் இந்தத் தீங்கு உனக்கு வந்து சேர்ந்துள்ளது. இதனை நீக்குவதற்கு காவிரிக்கு அருகே பூவின் இதழ்கள் விரிந்து பரந்து கிடக்கும் நெய்தல் நிலத்துக் கானலிலே, சோம குண்டம், சூரியகுண்டம் என்னும் இரண்டு பொய்கைகள் உள்ளன. அவற்றில் நீராடி அவற்றின் கரையில் இருக்கும் காமவேளின் கோயிலைத் தொழுதுவருவாயாயின் நின் கணவனோடு நீண்டகாலம் இவ்வையகத்தில் இன்புற்றிருப்பாய்” என்கிறாள்.

“மடலவிழ் நெய்தல்அம் கானல், தளம்உள,

சோமகுண்டம், சூரியகுண்டம்: துறைமூழ்கிக்

காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு

தம்இன் புறுவர் உலகத்துத் தையலார்:

போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்: யாம்ஒருநாள்

ஆடுதும்” என்கிறாள்.

இதனைக் கேட்டதும் அந்த மென்மை மனம் கொண்ட தனது தோழியாகிய கண்ணகி, உடனே அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒத்துக் கொள்வாள் என எதிர்பார்த்தாள் அந்தத் தோழி. ஏனென்றால் பொதுவாக பெண்கள் இதுபோன்ற இக்கட்டானச் சூழ்நிலையில் இருக்கும் போது தனக்கு வேண்டியவர்கள் எதைக் கூறினாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் கொண்டவர்கள்.

ஆனால் அவளுக்கோ அது ஒரு பலத்த ஏமாற்றமாக மாறிவிட்டது. ஒரேயொரு வார்த்தையில் தன் உள்ளக்கிடக்கையை, தனது தோழியிடம் உணர்த்துகிறாள்.

“அவ் ஆய் இழையாள்

பீடு அன்று” என்கிறாள்.

“பீடு” என்றால் பெருமை என்று பொருள். “பீடு அன்று” என்றால் அஃது பெருமைக்குரியது அல்ல என்று பொருள்.

கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து சென்றபோது. கண்ணகி தன் கணவனை அடக்கியாளத் தெரியாதவள், தன் கணவனின் உணர்வுகளையும் உளவியலையும் அறிந்து அவனோடு ஒத்திணங்கும் தன்மை இல்லாதவள், கோவலனின் இரசனையை அறிந்து அவனை திருப்தியடையச் செய்யாதவள் என்றெல்லாம் குற்றச்சாட்டிற்கு ஆளானவள்.

ஆனால், அவளது தோழி கூறியக் கூற்றிற்குக் கண்ணகியுரைத்தப் பதிலுரை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து அவள் மிகவும் அறிவுடைய நங்கை என்பதையும், நல்ல உளப்பாங்கு உடையவள் என்பதையும் உணரச் செய்துள்ளது.

மட்டுமின்றி, காப்பியக் காலம் தொடங்கி இன்றையக் கம்பியூட்டர் காலம் வரையிலும், சமூகத்திலும் குடும்பங்களிலும் மக்களுக்கு ஏதேனும் துன்பங்களும், தீங்குகளுக்கும், அவலங்களுக்கும் ஏற்படும் போது, அவற்றிற்கு கோயில்களிலும் சாமியார்களிடத்திலும் சென்று பரிகாரம் காண்பது இன்றளவும் ஒரு பழக்கமாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் புரையோடியுள்ளது.

தமிழகத்தில் புதையல் எடுப்பதற்கு நரபலியிடுவதும், கேரள மாநிலத்தில் ஒரு பாதிரியாரிடத்தில், தான் செய்த பாவங்களைச் சொல்லிப் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணைப் பல பாதிரிமார்கள் சேர்ந்து பங்கிட்டுப் பாவம் செய்தச் செய்தியும் மிகவும் பரபரப்பாக நாம் பத்திரிகைகளில் படித்ததும், மீடியாக்களில் பார்த்ததும்தானே?

நம்பிக்கை என்ற நோக்கில், இப்படிப்பட்டக் கொடுஞ் செயல்கள் சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு, இளங்கோவடிகள் தனது காப்பியத்தில், கண்ணகி என்னும் அற்புதமான கதாபாத்திரத்தைப் படைத்து, அவளின் “பீடன்று” என்ற ஒற்றை வார்த்தை மூலம் எவ்வளவுப் பெரியச் சவுக்கடியைக் கொடுத்திருக்கிறார் இச்சமுதாயத்திற்கு என்பதை நினைக்கும் போது அனைவரின் உள்ளமும் பூரிப்படையத்தான் செய்யும்.

எனவே கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரை இலக்கியங்கள் அனைத்தும் சில உளவியல் கருத்துகளை உள்ளடக்கி, அதன் மூலம் சமூகத்திற்கு மிகப் பெரிய உண்மையை உணர்த்துவதற்கு முற்படுகின்றன என்பதுதான் நிஜம்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment