இரா.குமார்
குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் வார்த்தைகளில் விளையாடுவதில் கெட்டிக்காரர்.
ஒருமுறை ஆக்ஸ்போர்டு பலகலைக்கழக மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன். அப்போது ஒரு மாணவர் எழுந்து, "Sir, what is the difference between a Station Master and a School Master?” என்று கேட்டார்.
அங்கே இருந்தவர்களுக்கு ஆச்சரியம். ஆசிரியரையும் ஸ்டேஷன் மாஸ்டரையும் எப்படி ஒப்பிட முடியும்? என்று குழம்பினர். அதே நேரத்தில், ராதாகிருஷ்ணன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். ராதாகிருஷ்ணன் சொன்னார்...
"The Station Master minds the train.....and the School master trains the mind.."
ராதாகிருஷ்ணன் சொன்ன இந்த பதிலைக் கெட்டு அரங்கமே அதிரும்படி கை தட்டினர்.
இதே போல இரு பொருள்படவும் நகைச்சுவையாகவும் பதில் அளிப்பதில் கருணாநிதியும் வல்லவர். அப்படி அவர் சொன்ன சில பதில்களைப் பார்ப்போம்.
கேள்வி: செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?
கருணாநிதி: செவ்வாயில் (சிவந்த வாய்) இருந்தால் அது உமிழ்நீர். தண்ணீர் அல்ல.
கேள்வி: கோழி முதலா? முட்டை முதலா?
கருணாநிதி: முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும் கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல் (capital)
தமிழறிஞர் கி.வா.ஜ. ஒரு கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் ஒருவர் பேசினார். கி.வா.ஜ. அவரைப் பார்த்து, “நீங்கள் இந்த சபைக்கு வந்ததுண்டோ?” என்று கேட்டார். அவர், “ இது மூன்றாந்தரம்” என்றார். கி.வா.ஜ. உடனே “ஆனாலும் உங்கள் பேச்சு முதல்தரம்” என்று சொல்லி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.
இலங்கையில் பருத்தித்துறை என்ற ஊரில் உள்ள பள்ளி விழாவில் கி.வா.ஜ. பேசினார். அங்கே வந்திருந்த புலவர் ஒருவர், தான் எழுதிய நூலை கி.வா.ஜ.வுக்கு அனபளிப்பாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட கி.வா.ஜ. , “இடத்துக்கு ஏற்ற கொடை” என்றார்.
“எப்படி?” என்று கேட்டார் புலவர்.
“இது பருத்தித்துறை. இங்கே நூல் கிடைப்பது பொருத்தம்தானே” என்றார் கி.வா.ஜ.
திருப்பூரில் நடந்த ஒரு விழாவில் பேசப் போயிருந்தார் கி.வா.ஜ. அங்கே திருப்பணி நடந்து கொண்டிருந்த ஒரு பெருமாள் கோயிலுக்கு இவரை அழைத்துச் சென்றனர். கோயிலின் சுவர்கள் எழும்பியிருந்தன. மேல்தளம் போடவில்லை. “ஏன் இன்னும் மேலே கட்டவில்லை?” என்று கேட்டார். “கருடர் கிடைக்கவில்லை” என்றனர்.
கி.வா.ஜ. உடனே, “பெருமாளுக்கே கருடர் கிடைக்கவில்லையா? ஆச்சரியம்தன்” என்றார். அவருடைய சிலேடையை ரசித்துச் சிரித்தனர். (கருடர் - உத்திரம், பெருமாளின் வாகனம் கருட பகவான்)