கொரோனா வைரஸ் பொதுமுடக்க காலத்திலும் தமிழ் இலக்கிய உலகம் எழுத்தாளர் வண்ணதாசனின் 75வது பிறந்தநாளை காணொலி மூலம் கொண்டாடி இருக்கிறது.
Advertisment
தமிழகத்தில் தமிழ் இலக்கிய உலகில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், திறனாய்வு கூட்டங்கள் என ஒரு இலக்கிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தமிழில் தினமும் காணோலி காட்சி மூலம் குறைந்தபட்சம் 2 இலக்கிய நிகழ்வுகளாக நடந்து வருகிறது. உலகமே கொரோனா வைரஸ் தொற்று பரவலால் முடங்கியிருக்கும் இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் வேறு எந்த மொழியிலாவது இலக்கிய நிகழ்வுகள், அரசியல், சமூகம் என நிகழ்வுகள் காணொலி மூலம் நடைபெறுகிறதா என்பது கேள்விகுறிதான். இதனை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் தனது இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நவீன இலக்கியத்தில் எப்போதும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு ஒரு நாற்காலி உண்டு. அன்பின் அலைகளை தன் எழுத்தில் விவரிக்கும் எழுத்தாளர் வண்ணதாசனின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். இவர் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய தந்தை எழுத்தாளர் தி.க.சிவசங்கரனும் எழுத்தாளர். இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
எழுத்தாளர் வண்ணதாசனும் அவருடைய ‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். 1962-ல் எழுத வந்த வண்ணதாசன் கலைக்க முடியாத ஒப்பனைகள், கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்,
Advertisment
Advertisements
சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு
ஒளியிலே தெரிவது, சில இறகுகள் சில பறவைகள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். சின்னு முதல் சினு வரை என்ற நாவலையும் எழுதியுள்ளார். அதோடு அவர் கல்யாண்ஜி என்ற பெயரில் புலரி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
வண்ணதாசன், இலக்கியச் சிந்தனை விருது, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது பெற்றுள்ளார்.
தமிழின் மதிப்புமிக்க எழுத்தாளரான வண்ணதாசனின் 75வது பிறந்தநாளை தமிழ் இலக்கிய ஆளுமைகள் வண்ணதாசன் 75 பவளக் கூடுகை என்று காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை கொண்டாடி உள்ளனர்.
இந்த நிகழ்வில் கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் பாரதி மணி, ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், 'சந்தியா' நடராஜன், எழுத்தாளர் பவா செல்லதுரை, எழுத்தாளர் போகன் சங்கர், எழுத்தாளர் க.மோகனரங்கன், ஆர்.ரவீந்திரன், க.வை பழனிச்சாமி, மரபின்மைந்தன் முத்தையா உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் பங்கேற்று அவருடைய படைப்புகளைப் பற்றியும் அவரைப் பற்றியும் உரையாற்றி சிறப்பித்து கொண்டாடி உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"