/tamil-ie/media/media_files/uploads/2017/09/demonetisation-759.jpg)
ப. சிதம்பரம்
ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு. ஆனால் உண்மையை பேசுவதற்கு உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. இறுதியாக உண்மை வெளியே வந்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையை வெளியிடுவதற்கான கடைசி நாளன்று - 30 ஆகஸ்ட் 2017 அன்று ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. மோசமான கொள்கை முடிவுகளை எடுப்பதில் உள்ள சிக்கல்களை நாம் சுட்டிக்காட்டியது போலவே, அந்த அறிக்கை உண்மையை கூறுகிறது. 15,28,000 கோடி அல்லது 15,44,000ல், 99 சதவிகித ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திரும்ப வந்துள்ளன. ஆக கருப்புப் பண ஒழிப்புக்காக ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என்று அறிவிக்கப்பட்ட திட்டம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 4 முதல் 5 லட்சம் கோடி வரை, பழைய நோட்டுக்கள் திரும்பி வராது என்று கூறினார்கள். திரும்ப வராமல் இருக்கும் பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, தன் கணக்கிலிருந்து கழித்து, அது அரசாங்கத்துக்கு லாபமாக அமையும் என்று கூறப்பட்டது. கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைத் தவிர இதர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறப்பட்டது. அவர்கள் கூறி அந்த கதையின் சாயம் வெளுத்து விட்டது. பண மதிப்பிழப்பு அறிவிக்கையின்போது, பிரதமர் பேசியது, மற்றும் 7 நவம்பர் 2016 நாளிட்ட ரிசர்வ் வங்கியின் கடிதம் ஆகிய இரண்டிலும் கூறப்பட்ட பண மதிப்பிழப்புக்கான நோக்கங்களை அடையவே முடியாது என்று நான் அப்போது கூறியிருந்தேன். போலி நோட்டுக்கள் வந்து விட்டன. தீவிரவாதம் அடங்கிப் போகவில்லை. கருப்புப் பணம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நோக்கம் சிறந்த நோக்கம்தான். ஆனால் அதை செயல்-படுத்துவதற்கான வழி தவறு மட்டுமல்ல, எவ்வித பயனையும் தராதது.
பணமதிப்பிழப்புக்கு ஆதரவாக கூறிய அனைத்தும் உண்மைக்கு மாறானதாக இருந்ததால், அடிக்கடி வசதிக்கு ஏற்றார்ப்போல உண்மையை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். இதற்கு ஆதரவான பிரச்சாரம் வலுவாக முன்னெடுக்கப்பட்டது. துணியும் உண்மை இல்லாத காரணத்தால், இதற்காக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம் முழுவதும் பொய்யானது என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. நிலைமை நினைத்ததை விட மோசமாக இருக்கிறது. சமீபத்தில் வெளி வந்த பத்திரிக்கை குறிப்பில் உள்ள சில முத்துக்களை பார்ப்போம்.
1) குறிப்பிட்ட பழைய நோட்டுக்கள் முழுவதுமாக வங்கிகளுக்கு வந்து சேர்ந்து, பயன்படுத்தத் தக்கதாக மாறும்.
பழைய 500 மற்றும் 1000 நோட்டுக்கள் பயன்படுத்த முடியாதவையா?
2) தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் 83 சதவிகிதம் மட்டுமே. அவை மீண்டும் மதிப்புள்ளதாக ஆக்கப்பட்டுள்ளன.
குறைவான நோட்டுக்களை அச்சிடுவதன் மூலம், செயற்கையாக ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டது. பல ஏடிஎம் இயந்திரங்கள் பணம் நிரப்பப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே காலியாகின.
3) பழைய நோட்டுக்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெற முடிந்ததே ஒரு சாதனை. குறுகிய காலத்தில், மிக அதிக அளவு எண்ணிக்கையிலான நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
பணத்தை திரும்பப் பெறுவதையே ஒரு சாதனை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அடுத்ததாக அத்தனை நோட்டுக்களையும் 9 மாதங்களில் எண்ணி முடித்ததையும் சாதனையாக கூறுவார்கள்.
4) நவம்பர் 2016 முதல் மே 2017 வரையிலான காலகட்டத்தில் 17,526 கோடி ரூபாய் கருப்புப் பணம் என்று கூறப்படுகிறது. 1003 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு என்பது, வருமான வரித் துறை செய்யும் ஆய்வு, தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு ஆகியவை முடிந்த பிறகே தெரிய வரும். இதில் பல வழக்குகளில் அரசு தோல்வியை சந்திக்கக் கூடும். இறுதி எண்ணிக்கை இன்னும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
5) ஹவாலா பரிவர்த்தனை மற்றும் 37,000 போலி நிறுவனங்கள் மூலமாக கருப்புப் பணம் பதுக்கப்பட்டதை அரச அடையாளம் கண்டுள்ளது.
அரசால் இது போன்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்த முடியும். வரி தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மட்டுமே இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும்.
6) 23 மே 2017 வரை, வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு, 400 பினாமி பரிவர்த்தனைகளை கண்டறிந்துள்ளது. இதில் இணைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 600 கோடியாகும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்போடு ஒப்பிடுகையில் இது மிக மிக சிறிய எண்ணிக்கை.
7) பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் மற்றும் நக்சலைட்டுகளுக்காக திரட்டப்படும் நிதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான சான்றுகளை அளித்தால் இதை நம்பலாம். ஜம்மு காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை மட்டும் வைத்துப் பார்க்கையில், தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதையே உணர்த்துகிறது. ஏழு மாநிலங்களில் 35 மாவட்டங்கள் நக்சல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சரே கூறியுள்ளார்.
8) அக்டோபர் 2016 அன்று 71.27 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2017 மே இறுதியன்று உள்ளபடி, 111.45 கோடியாக, 56 சதவகித வளர்ச்சியை அடைந்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் லேசாக அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால் இந்த எண்ணிக்கை நவம்பர் 2016 அன்று உள்ள அதே அளவுதான்.
9) ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை காரணமாக அதிக அளவில் வசூலிக்கப்பட்ட தொகை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாகவே வந்துள்ளது.
மறைமுக வரி வசூல் எப்படி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகாரிக்கும்?
மரண அடி
10) பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பாதிப்பு இருக்கும் என்று சிலர் நம்பினர். அது பொய் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெறும் 3.1 சதவிகிதமாக குறைந்துள்ள வளர்ச்சி விகிதம் போதுமான அதிர்ச்சியை உண்டு பண்ணவில்லையா? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் முதல் ஆட்சியில் ஜிடிபி வளர்ச்சி 8 முதல் 9 சதவிகிதமாக இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வளர்ச்சி விகிதம் 7 முதல் 8 சதவிகிதமாக இருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, காலாண்டு வளர்ச்சி 6 முதல் 7 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2017-18ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவிகிதம். ஒட்டுமொத்த மதிப்பு வளர்ச்சி 5.6 சதவிகிதம். உற்பத்தி வளர்ச்சி 1.2 சதவிகிதம். இந்த வீழ்ந்த வளர்ச்சி விகிதங்கள் பொருளாதாரத்துக்கு விழுந்த சம்மட்டி அடி இல்லையா ?
அதிகாரம் தனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறது என்று சிலர் கருதுகின்றனர். நம்மைப் போன்ற மற்றவர்கள், ஒரு கொள்கை முடிவின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, அந்த கொள்கை பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே ஆதரிக்கிறோம்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, உத்தரப் பிரதேசம், கோவா மணிப்பூர் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள பிறவு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் நடந்துள்ள குழந்தைகள் மரணம், ஹரியாணாவில் நடந்த கலவரம் ஆகியவற்றையும், நிர்வாகத் திறனில்லாததையும் பொறுமையாக சகித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப் படுகிறோம். ஒரு மிக மோசமான அரசியலை தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்பற்றி வருகிறது. இது சமூக அமைதியையும், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும்.
(தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் :
தமிழில் : ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.