ஸ்ரீவித்யா
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்தும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஏழைகளுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கும், பிரதமரின் உஜாலா திட்டத்துக்கு எதிராக இருப்பதால், இந்த நடவடிக்கை என்று காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதன் பின்னால் மிகப் பெரிய சூட்சுமம் உள்ளது.
தற்போது நாடு முழுவதும், 18.11 கோடி பேர் சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். இதில், உஜாலா திட்டத்தின் கீழ் பயன்பெற்ற, மூன்று கோடி பேரும் அடங்குவர். இதைத் தவிர, 2.66 கோடி பேர் மானியம் வேண்டாம் என்று தானாக முன்வந்து தெரிவித்து, மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டரை வாங்கி வருகின்றனர்.
பல்வேறு பொருட்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், அரசுக்கு மிகப் பெரிய சுமையாக இருப்பதால், மானியங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக நேரடி மானியப் பலன் திட்டம் கொண்டு வரப்பட்டு, மானியங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சமையல் காஸ், ரேஷன், உரம், கல்வி உதவித் தொகை என பல திட்டங்களுக்கான மானியங்கள், நிதி பலன்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதன் மூலம், பொய் கணக்கு காட்டுவது, மற்றவர்களுக்கு சேர வேண்டிய மானியத்தை சுருட்டுவது போன்றவை குறைக்கப்பட்டன. இவ்வாறு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
இந்த நிலையில், மிக அதிக அளவில் நுகரப்படும், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியங்களே, அரசுக்கு மிகப் பெரிய பாரமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைகளை சந்தை விலைக்கு ஏற்ப தினமும் நிர்ணயிப்பதன் மூலம் தற்போது, இவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கெரசின் மற்றும் சமையல் காஸ் மானியங்களை குறைக்கும் தீவிரத்தில் அரசு உள்ளது. சமையல் காஸ் சிலிண்டருக்கான விலையை மாதந்தோறும், ரூ.2 உயர்த்திக் கொள்ளும் திட்டம், 2016, ஜூலை 1 அமலுக்கு வந்தது. அது இந்தாண்டு ஜூலை, 1 முதல், ரூ.4ஆக உயர்த்தப்பட்டது.
கெரசினுக்கான மானியத்தை குறைப்பதுடன், அதன் பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஏழை ஏளிய மக்களுக்கு இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் உஜாலா திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது.
கடந்த, 2014–15 நிதியாண்டில் கெரசினுக்கான மானியம், ரூ.30,575 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக, ரூ.16,500 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானிய சுமை, ரூ.46,450 கோடியில் இருந்து, ரூ.25,000 கோடியாக குறைகிறது.
இந்தாண்டு மார்ச் மாத்தில், ஒரு சிலிண்டருக்கு, ரூ.300 மானியம் வழங்கப்பட்டது. ரூ.100க்கு சரிந்த மானியம், தற்போது, ரூ.251ஆக உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே மாதந்தோறும் விலை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மூன்று மாதங்களுக்குள் இது முடிவுக்கு வருகிறது. கடந்த, 17 மாதங்களில், சிலிண்டர் விலை ரூ.76 மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மாதந்தோறும் விலையை உயர்த்தும் திட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக அரசு கூறுகிறது. மாற்று திட்டம் குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதன்படி, சர்வதேச சந்தைக்கு ஏற்ப அவ்வப்போது விலையை மாற்றிக் கொள்ளும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படலாம். அவ்வாறு செய்தால், அரசுக்கான மானிய சுமை குறையும். அதே நேரத்தில், உஜாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றவர்களுக்கு சில சலுகையும் வழங்கப்படும்.