தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டிருப்பது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘ஐஇ தமிழ்’க்கு அளித்த பேட்டி!
“குழந்தைகளை நல்ல மனிதர்களாக, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறவர்களாக உருவாக்கும் விதமாக புதிய பாடத்திட்டம் அமையவேண்டும். ஏதோ ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் நோக்கில் பாடத்திட்டம் அமைந்தால், பிரயோஜனமில்லை. வேறு எந்த பாடத்திட்டத்தையும் ‘பென்ச் மார்க்’காக வைத்துக்கொண்டும் பாடத்திட்டம் தயாரிக்ககூடாது. வாழ்வில் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ளும்விதமாக பாடத்திட்டம் இருக்கவேண்டும். குறிப்பிட்ட தேர்வு என்றில்லாமல், எந்த தேர்வு வைத்தாலும் அதற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இருக்கவேண்டும்.
இன்னொரு விஷயம், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், எந்தப் பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனால் பலன் இருக்காது. உதாரணத்திற்கு, சில பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே இருப்பார்கள். அவர்களே துப்புரவுப் பணியில் இருந்து, சமையல் பணி வரை கவனித்தால் கற்றலும் கற்பித்தலும் அங்கு எப்படி நடக்கும்? எனவே தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்!
எந்தக் கல்வியையும் திணிப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்களே விரும்பி பயிலும்விதமாக பாடத்திட்டம் இருக்கவேண்டும்” என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
அனந்தகிருஷ்ணன் குழுவில் மனநல மருத்துவர் ஒருவரையும் இடம்பெற்ச் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்படுகிறதே? என அவரிடம் கேட்டபோது, “மாணவர்களில் யாரும் மனநோயாளிகள் இல்லை. பாடத்திட்டத்தை தயார் செய்ய அப்படி மனநல நிபுணர் தேவை என நான் நினைக்கவில்லை” என்றார், பொட்டில் அடித்ததுபோல!
பாடத்திட்ட மாற்றம் பள்ளிக் கல்வியில் புரட்சியை உருவாக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.