/indian-express-tamil/media/media_files/2025/02/12/f6xmaySiutA0XkSGU23r.jpg)
புதுதில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியான தேர்தல் முடிவில் தோல்வியடைந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: தாஷி டோப்கியால்)
கட்டுரையாளர்: தவ்லீன் சிங் TAVLEEN SINGH
டெல்லியில் கடந்த வாரம் நாம் பார்த்தது தேர்தல் அல்ல அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வாக்கெடுப்பு ஆகும். தோல்வியடைந்தது ஆம் ஆத்மி கட்சியல்ல. கெஜ்ரிவால் தான், ஏனென்றால் அவர் தொடங்கிய அரசியல் கட்சியை அவரின் ஒரு அங்கமாக மாற்றி விட்டிருந்தார். ஏளனமான, ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றக்கூடிய ஒரு புதிய வகையான அரசியல் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். இதனாலேயே அவர் கடந்த தேர்தலில் ஒரு நம்பிக்கையின் சின்னமாக டெல்லியை வென்றபோது, சட்டமன்றத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றார். அவர் இந்த நம்பிக்கையை விரைவாகவே சிதைக்க ஆரம்பித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Tavleen Singh writes: In Delhi, this was no election, but a referendum on Kejriwal
திடீரென்று, இந்த சாதாரண, சிறிய மனிதர், தான் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் 'ஆம் ஆத்மி'யைப் (சாதாரண மக்கள்) போல் உடை உடுத்தி, வாழ விரும்பியவர், விரும்பத்தகாத கர்வம் கொண்டதற்கான அறிகுறியைக் காட்டத் தொடங்கினார். தில்லியின் பேருந்துகளின் பின்புறங்களிலும், நகரம் முழுவதிலும் உள்ள விளம்பரப் பலகைகளிலும் அவர் படம் பெரிதாக்கப்பட்டு, திகைப்பூட்டும் வண்ணங்களில் வரையப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டது. மேலும் புதுப்புது யோசனைகள் அல்லது திட்டங்களை அவர் விவரிப்பதைக் கேட்காமல் வானொலியைக் கேட்பது சாத்தியமில்லாமல் போனது. வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கான அவரது நகைப்புக்குரிய மற்றும் முற்றிலும் பயனற்ற 'ஒற்றைப்படை-இரட்டை' போக்குவரத்துத் திட்டம் போன்ற பயனற்ற யோசனைகள் அவை. ஆனால் அவர் ஏதோ அதிசயம் செய்வது போல் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் அவருக்கு உண்மையிலேயே தகுதியற்ற விளம்பரத்தை அளித்தன.
என் தனிப்பட்ட கருத்தில், முதன்முதலில் கெஜ்ரிவால் ஒரு பொது நபராக அறியப்பட்ட அந்த பரவசமான அன்னா ஹசாரே நாட்களிலும், ஊழலை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவருக்கு பக்கபலமாக இருந்த இந்த மனிதர் தந்திரம், போலித்தனம் மிக்கவராக இருப்பதைப் பார்த்தேன். தேர்தல் நேரத்தில், நான் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் கிராமப் பகுதிகளுக்குச் சென்றபோது, இலட்சக்கணக்கான மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் பற்றும் வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். பீகாரில் உள்ள ஒரு கிராமம், அவர்களால் ‘நம் கெஜ்ரிவால்’ என்று அறியப்பட்ட இவரின் ஊழலுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்தின் எழுச்சி காரணமாக தங்களது போராட்டத்தை கையிலெடுத்ததை என்னால் மறக்க முடியாது.
கெஜ்ரிவாலை நான் முதன்முதலில் மிக அருகில் பார்த்தது, பனாரஸில் உள்ள அஸ்ஸி காட் எனும் இடத்தில், எனது ஹோட்டலுக்கு சற்று வெளியே ஒரு ஆலமரத்தடியில் அவர் ஏதோ உண்ணாவிரதம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் சோர்வாக அமர்ந்திருந்த நிலையில் தான். அவர் நரேந்திர மோடியை எதிர்த்து களமிறங்க வந்திருந்தார். இதை நான் உடனடியாக அவர் ஒரு மாயையில் இருப்பதை உணர்ந்தேன், ஏனென்றால் தில்லியின் முதலமைச்சராகி சில வாரங்கள் மட்டுமே இருந்த அரசியல் அனுபவத்தைக் கொண்ட ஒருவர் ஏற்கனவே பிரதமராகும் நம்பிக்கையுடன் இருப்பதைக் கண்டேன். அப்போது எச்சரிக்கை மணிகள் சத்தமாக ஒலித்திருக்க வேண்டும், ஆனால் டெல்லி மக்கள் தொடர்ந்து அவர் மீது நம்பிக்கை வைத்தனர். முதல்முறை அவர்களை கைவிட்டதற்காக அவரை மன்னித்து மேலும் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெற்றி பெற்றபோது, தில்லி மக்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் அவர் அவர்களுக்கு வழங்கப்போவதாக உறுதியளித்தார். சுவாசிக்க சுத்தமான காற்று, யமுனையில் சுத்தமான தண்ணீர், சுத்தமான அரசியல்வாதிகள் மற்றும் தொடர்ந்து அரசியல் தலைவர்களால் துரோகம் செய்யப்பட்ட இந்த நகரத்தில் ஒரு புதிய துவக்கத்தை உருவாக்க வேண்டும் என்று அனைத்தையும் செய்ய உறுதி அளித்தார். அவர் தொடக்கம் நன்றாகவே இருந்தது.
அரசுப் பள்ளிகள் நன்றாக இருந்ததால், தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்ததாக நான் தொடர்ந்து சந்திக்கும் பலர் என்னிடம் கூறினார்கள், அந்த அளவுக்கு பள்ளிகள் மேம்பட்டன. நான் வாக்களிக்கும் புது தில்லி தொகுதியில் நானே சில பள்ளிகளைப் பார்த்திருக்கிறேன், இதற்கு நான் உறுதியளிக்க முடியும். நான் சில 'மொஹல்லா கிளினிக்குகளை' (ஆரம்ப சுகாதார நிலையங்கள்) பார்வையிட்டேன், அவை சுத்தமாகவும், போற்றத்தக்கதாகவும் இருப்பதைக் கண்டேன். அப்படியென்றால், அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறாத அளவுக்கு என்ன தவறு நடந்தது?
அளவில்லா ஆசை மற்றும் கர்வம் என்ற இரண்டு வார்த்தைகளே எனக்கு நினைவுக்கு வருகின்றன. தேசியத் தலைவர் என்று தனது தோற்றத்தை மாற்றி அமைக்க விரும்பிய கெஜ்ரிவால் டெல்லி மக்களை மறந்துவிட்டார். திடீரென்று, குஜராத், கோவா மற்றும் எல்லா இடங்களிலும் தேர்தல்களில் வெற்றி பெற விரும்பினார். அவர் பஞ்சாப்பை வென்ற பிறகு, ஆசையும் கர்வமும் ஆபத்தான நிலைக்கு உயர்ந்தது, இதை கவனிக்காதவர்கள் அவரைச் சூழ்ந்த முகத்துதி பாடும் அமைச்சர்கள் மட்டுமே ஆவர். சாதாரண வாக்காளர்கள் கவனித்தனர். அவரது மூத்த அமைச்சர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருக்கு கீழ்ப்படியும் ஒருவரை முதல்வராக நியமித்தார், அவரும் அவர் டெல்லியின் (முதலமைச்சர்) இருக்கையை ராமருக்கு காலியாக வைத்திருப்பது போல் காட்டிக் கொண்டு அவரது (கெஜ்ரிவால்) பெயரில் ஆட்சி செய்தார்.
இதற்கிடையில், டெல்லி சீரழிவுக்கு மேல் சீரழிந்தது. தில்லியின் குடிமகளாக, எனது குழந்தைப் பருவத்தையும், ஏறக்குறைய நான் வளர்ந்த பருவத்தை இங்கு கழித்தவள் என்ற முறையில், யமுனையின் நீர் எவ்வளவு விஷமாக மாறியுள்ளது என்பதையும், குப்பைமேடுகள் குப்பை மலைகளாக மாறுவதையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் வலிக்கிறது. தில்லி கிராமத்தில் வசிக்கும் ஒருவர் என்ற முறையில், ஒவ்வொரு முறையும் நான் என் வீட்டை விட்டு வெளியே வரும்போது அந்த அசுத்தங்கள் மீது நான் கால் வைப்பதை என்னால் போதுமான அளவில் விவரிக்க இயலாது. அசுத்தமான கடைவீதிகளும் அசுத்தமான தெருக்களும் எல்லா இடங்களிலும் உள்ளன, அவற்றில் நட்சத்திர விடுதிகளும், சிறந்த அலுவலக கட்டிடங்களும் தனியார் முதலீட்டில் பளபளப்பாக எழுகின்றன.
இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் எனக்கு அடிக்கடி நினைவுபடுத்துவது போல, இந்தக் காட்சிகள் ஒவ்வொரு இந்திய நகரத்திலும் நீங்கள் பார்க்கும் விஷயங்கள் தான். ஆனால், டில்லியில் தான், தன்னை ஒரு மிகவும் வித்தியாசமான தலைவனாக சித்தரித்துக் கொண்ட ஒரு மனிதர் நமக்குக் கிடைத்தார், அவர் இந்தியக் குடிமக்களில் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் எளிமையானவர்கள் தங்கள் குரல்களும் கேட்கப்படும் என்று நம்பும் வாக்குறுதியைக் கொண்டு வந்தார். சராசரி இந்திய வீடு என்ற ஒற்றை அறைக் குடியிருப்பில், சாதாரண இந்தியர்கள் கனவு காண முடியாத அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான ஒரு குடியிருப்பை அந்தத் தலைவர் தனக்காக கட்டியெழுப்பியபோது, அந்த மக்களின் எல்லா நம்பிக்கையும் பறிபோனது.
கடந்த வார வாக்கெடுப்பில் முழுமையாக தோற்றவர் என்றால் அது கெஜ்ரிவால்தான். மற்ற அரசியல்வாதிகளைப் போலவே தானும் என்பதை நிரூபித்துள்ளார். அவர் நம்பிக்கையின் சின்னமும் இல்லை, புதிய அரசியல் கலாச்சாரமோ, புதிய கனவோ எதுவும் கிடையாது.
மொழிபெயர்ப்பு: எம். கோபால்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.