Advertisment

பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு யோசனைகள், திட்டம், திறம்பட செயல்படுத்தல் தேவை

மாநில முதல்வர்களும் மத்திய அரசின் முடிவை கண்மூடித்தனமாக ஏற்றுள்ளனர். பசி எங்கும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடும் வேரூன்றியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai lockdown corona

chennai lockdown corona

ப.சிதம்பரம், கட்டுரையாளர்.

Advertisment

மனித குலத்தின் வரலாற்றிலேயே கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள போன்றதொரு சவால் இதுவரை நிகழ்ந்ததில்லை. இதுபோல் 207 நாடுகளையும், பல லட்சம் மக்களையும் பாதித்ததில்லை. இது மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் ஏற்படக்கூடிய நீண்ட நாள் விளைவுகள் இதுவரை நிச்சயமற்றதாகவே உள்ளது.

கல்லெறிகளுக்கு மத்தியில் மருத்துவர் சைமன் உடல் அடக்கம்: சக டாக்டர் கண்ணீர் வீடியோ

அந்த அசாதாரண சூழ்நிலையில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தலைவர் மட்டுமே இருப்பார். அது பிரதமர் அல்லது அதிபர் அல்லது புகழ்பெற்ற தலைவர் மட்டுமே ஆவார். இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இருக்கிறார். அதனால் தான் மார்ச் 25-ம் தேதி தெரிவித்த எனது கருத்தில் அவரை கமாண்டர் என்று குறிப்பிட்டிருந்தேன். நாம் எல்லாம் அவர் படையின் படை வீரர்கள். மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை செய்யப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை மற்றும் தற்போது அது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என அனைத்தையும் வரவேற்றேன். இந்த ஊரடங்கு உள்ளவரை நாம் அனைவரும், அதன் விதிகள் மற்றும் வரைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதுவே நமது கடமை. ஒரு ஜனநாயகம் துப்பாக்கி சூடு, தடியடியின்றி நிர்வகிக்கப்படுவதற்கான ஒரே வழியாகும்.

சொற்களஞ்சியம்

நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் புதிய வார்த்தைகளை வைத்து, எனக்கு புரிந்த வகையில் நான் ஒரு சொற்களஞ்சியத்தியத்தை உருவாக்கியிருக்கிறேன்.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் – 19: புதிதாக மாறி வந்துள்ள பீட்டா கொரோனா வைரஸ், 70 சதவீத சார்ஸ் கொரோனா வைரசை போன்றே மரபணுக்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இது சீன நோயாளிகளில் முதலில் கண்டறியப்பட்டது. அதிகளவில் பரவக்கூடிய தன்மை கொண்டது மற்றும் 75 நாளில் இது மிகப்பெரிய தொற்றாக மாறியது. இதை குணப்படுத்துவதற்கான மருந்துகளோ அல்லது இதற்கு தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Lockdown (லாக்டவுன்): ஊரடங்கின் உச்சகட்ட வடிவம், முழு நகரமோ அல்லது மாநிலமோ அல்லது நாடோ முழுவதையும் மூடுவது. சீனா, இதை வுஹான், ஹீபை மற்றும் மற்ற மாகாணங்களிலும் முயற்சி செய்தது. இதன்மூலம் நிலைமையின் தீவிரம் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதை பல்வேறு நாடுகளும் பின்பற்றி, வெவ்வேறு அளவுகளில் வெற்றியும் பெற்றன.

பரிசோதனை: ஒருவரையும் பரிசோதிக்க வேண்டாம். தொற்றாளர்களை கண்டுபிடிக்க வேண்டாம் என்பது ஒரு கட்டுரையின் தலைப்பு. இது முற்றிலும் உண்மை. பரிசோதனை செய்வதில் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் அதை செய்யாததால், அவற்றிற்கான விலையை கொடுத்தன. இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் குழப்பமடைந்துள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகள் அதை விளையாட்டாக பார்த்தன. விரிவான பரிசோதனை செய்யப்படவில்லையென்றால், ஊரடங்கு, 144 தடை போன்றவற்றால் எந்த நன்மையும் ஏற்படாது என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை கருவிகள்: பரிசோதனையில் பலமுறைகள் உள்ளன. சில பரிசோதனைகள் செய்து முடிவுகள் கொடுப்பதற்கு 72 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம். நோய் எதிர்ப்புத்திறன் பரிசோதனை முடிவுகள் 4 மணி நேரத்திலே கிடைத்துவிடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிகள் கவுன்சில் இந்த நோய் எதிர்ப்புத்திறன் சோதனைகளை அங்கீகரிப்பதற்கு சில வாரங்கள் தாமதமானது. மேலும் பரிசோதனை கருவிகளுக்கு உலகளவில் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக விரைவு பரிசோதனை கருவிகளுக்கு அதிகளவில் தட்டுப்பாடு உள்ளது. உலகில் சில நாடுகளே பரிசோதனை கருவிகளை தயாரிக்கின்றன. அதில் சீனாவும் ஒன்று. இறுதியில் இந்தியாவும் பரிசோதனைகளை செய்துவருகிறது. ஏப்ரல் 16-ம் தேதி வரை இந்தியாவில் 2 லட்சத்து 86 ஆயிரத்து எழுநூற்றி பதினாறு பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது அல்லது பத்து லட்சம் பேருக்கு தலா 220 பேர் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

அமலாக்கம்: ஊரடங்கை அறிவிப்பது ஒன்று, அதை அமலாக்குவது மற்றொன்று. ஊரடங்கு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டது. சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்திலே ஊரடங்கு செய்யப்பட்டுவிட்டது. 24-ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர், தேசிய அளவிலான ஊரடங்கு அறிவித்த பின்னரே, மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு துவங்கியது. ஊரடங்கு துவங்கும் முன் 4 மணி நேரத்திற்கு முன்னர் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இது எல்லோருக்கும் பீதியை ஏற்படுத்தியது. அடுத்த நாள் முதல் வேலை கிடைக்குமா என்பது யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. வீட்டில் இருப்பதற்கு பணம் வழங்கப்படுமா என்பதும் யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் இருப்பதற்கும் பணம் வேண்டும். மார்ச் 25-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் ஒரு மோசமான நிவாரண உதவிகளை அறிவித்தபோது, அதில் லட்சக்கணக்கான ஏழைமக்களும், குறிப்பான புலம்பெயர் தொழிலாளர்களும் விடுபட்டிருந்தனர். அப்போது அனைவருக்கும் இருந்த பீதி குழப்பமானது. அப்போது நடந்த அனைத்தும் இந்தியாவின் மீது விழுந்த கறை. அது எல்லா காலத்திலும் நிலைத்திருக்கும்.

பின்விளைவுகள்

கூட்டாட்சி: இதை முதலில் நாம் தூக்கியெறியவேண்டும். சுகாதாரம், ஆரோக்கியம், பரிசோதனை, தனிமை, நிவாரணம் ஆகிய அனைத்தும் இரண்டாவது பட்டியல், அதாவது இந்திய அரசியலமைப்பில் மாநில பட்டியலில் இருக்க வேண்டும். கருவூலத்தின் சாவி மட்டும் மத்திய அரசிடம் இருக்கும். மாநில அரசுகள் மத்திய அரசின் அனுமதியின்றி எதையும் வாங்க முடியாது. இதன் விளைவாக அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. மாநில அரசுகள் எதையும், மத்திய அரசிடம் இருந்து இறைஞ்சிக் கேட்க வேண்டிய நிலையில் இருந்தன. நிதி ஒதுக்கீடு கேட்டு எழுதப்படும் மாநில முதலமைச்சரின் கடிதங்கள் பல வாரங்களாக பதிலின்றி காத்துக்கிடக்கும்.

ஏழை மக்கள்: மக்கள் தொகையின் ஒரு பகுதி 40 நாட்களுக்கு பாதுகாப்பின்றி விடப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வுக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கவில்லை. மாநில முதல்வர்களும் மத்திய அரசின் முடிவை கண்மூடித்தனமாக ஏற்றுள்ளனர். பசி எங்கும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடும் வேரூன்றியுள்ளது. அரசு ஏன் ரூ.65 ஆயிரம் கோடியை (செலவினங்களுக்காக போடப்பட்டுள்ள ரூ.30 லட்சம் கோடி தொகையில்) ஒதுக்கி, 50 சதவீதம் குடும்பங்களுக்கு உதவியும், ஆதரவும் தரக்கூடாது என்பது மர்மமாகவே உள்ளது.

பொருளாதாரம்: முதல் காலாண்டில் அது சரிந்து, பூஜ்யமளவு வளர்ச்சியைப்பெற்றுள்ளது. அதை சரிசெய்வதற்கான திட்டங்கள் இல்லை. பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க யோசனைகளும், திட்டங்களும், சிறப்பான முறையில் செயல்படுத்தலும் வேண்டும். ஒரு திறமையான அரசு, இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, டாக்டர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் பனகாரியா, டாக்டர் எஸ்தர் டியூப்ளோ, டாக்டர் அரவிந்த சுப்ரமணியன், டாக்டர் ஐசக் தாமஸ், டாக்டர் ஹிமான்சூ, டாக்டர் ஜீன் டிரீசி மற்றும் டாக்டர் ஜாதித் சின்னாய் போன்ற பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய பணிக்குழுவை நியமனம் செய்து, அவர்களின் அறிவுறுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புனித ரமலான் தொழுகைக்கும் மெக்காவில் அனுமதி இல்லை – சவுதி அரசு!

செய்திகள்: அரசின் செய்தி குறிப்பே செய்தி, விமர்சங்கள் அனைத்தும் போலியானவை. நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக உயர்ந்து வருகிறது. ஆனால் வரைபடம் ஹாக்கி மட்டையைப்போல் நிமிர்ந்து நிற்கிறது. இது கெட்ட செய்தி. ஆனால் படை வீரர்களாகிய மக்களும், கொரோனா போராளிகளான முன்னணி ஊழியர்களும், அவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ, இல்லையோ, அவரகளின் கமாண்டர் சொல்வதை கேட்டு, அவர்களே கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள். ஜெய்ஹிந்த்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க - Revival of the economy requires ideas, a plan, and effective implementation 

இக்கட்டுரையை எழுதியவர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர்.

தமிழில்: R.பிரியதர்சினி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment