மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று ( ஜூலை 8ம் தேதி) முடிவடைந்தது. இன்று ( 9ம் தேதி), வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கில் தண்டனை நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனிமொழி(திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), வி. மைத்ரேயன்(அதிமுக), ஆர்.லட்சுமணன்(அதிமுக), டி.ரத்தினவேல்(அதிமுக), டி.ராஜா(சிபிஐ) உள்ளிட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கும் வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. நேற்று (ஜூலை 8ம் தேதி) மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
திமுக சார்பில் சண்முகம் , வில்சன் மற்றும் கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் அதிமுக நகரச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் அதன் கூட்டணி சார்பில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், வைகோவுக்கு மாற்று வேட்பாளராக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு பரிசீலனை, இன்று ( 9ம் தேதி) நடைபெற்றது. இந்த சூழலில் தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நீதிமன்றம் நிறுத்திவைத்திருந்தாலும், மனுவை ஏற்பார்களா என்பது குறித்து தெளிவான தகவல்கள் தெரியாமல் இருந்த நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளான 11ம் தேதி, திமுக சார்பில் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த என்ஆர் இளங்கோ, தனது வேட்புமனுவை திரும்ப பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.