/indian-express-tamil/media/media_files/2025/09/05/tamil-nadu-sea-level-rise-2025-09-05-15-58-40.jpg)
சென்னை மெரீனா முதல் நாகை வரை... தமிழகத்திற்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! அலற வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்
சென்னை மெரினா கடற்கரையில் நின்று கடலின் அழகை ரசிக்கிறீர்களா? அல்லது நாகப்பட்டினம், கடலூர் போன்ற கடற்கரை நகரங்களில் வாழ்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை! 2100-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
2100-ஆம் ஆண்டுக்குள் தமிழக கடற்கரை அருகே கடல்மட்டம் 78.15 செ.மீ. வரை உயரக்கூடும் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. "Theoretical and Applied Climatology" என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, இந்தியாவின் கடற்கரைகளில் உள்ள அபாயங்களை ஆய்வு செய்துள்ளது.
அதிவேகமாக உயரும் கடல்மட்டம்
அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஏ. ராமச்சந்திரன் தலைமையிலான இந்த ஆய்வு, 1992 முதல் 2023 வரையிலான காலத்திற்கான அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) செயற்கைக்கோள் தரவுகளையும், PSMSL (Permanent Service for Mean Sea Level) அலைமானி (tide gauge) பதிவுகளை ஆராய்ந்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் IPCC (Intergovernmental Panel on Climate Change)-யின் 6-வது மதிப்பீட்டு அறிக்கையுடன் இணைந்து, SimCLIM மென்பொருளைப் பயன்படுத்தி எதிர்காலப் கணிப்புகள் உருவாக்கப்பட்டன. உலகம் முழுவதும் உள்ள 39 காலநிலை மாதிரிகளின் தரவுகள், பல்வேறு சமூகப் பொருளாதாரப் பாதைகளின் (SSPs) கீழ் கடல்மட்ட உயர்வைக் கணிக்கப் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் 247 கடற்கரைப் புள்ளிகளில் ஒவ்வொரு 4 கி.மீ. இடைவெளியிலும் இது கணக்கிடப்பட்டு, மாவட்ட வாரியாகத் தொகுக்கப்பட்டது.
அதிகப்படியான வெப்பநிலை காரணமாக கடல் நீர் வெப்பமடைந்து விரிவடைகிறது. இதனால் கடல் மட்டம் உயர்கிறது. நாகை, சென்னை போன்ற பகுதிகளில் கடல்மட்டம் ஏற்கனவே உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டம் தாழ்வான பகுதியில் இருப்பதாலும், பல ஆறுகள் அங்கு சங்கமிப்பதாலும் வெள்ளம், மண் அரிப்பு அபாயத்தை அதிகம் எதிர்கொள்கிறது. இது வெறும் கடலை மட்டும் பாதிக்காது.
மாவட்ட வாரியாக பாதிப்புகள்
தூத்துக்குடி: ஒரு வருடத்தில் 0.17 மிமீ குறைந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்: ஒரு வருடத்தில் 0.18 மிமீ உயர்ந்துள்ளது.
சென்னை: ஒரு வருடத்தில் 0.55 மிமீ உயர்ந்துள்ளது.
குறுகிய கால மாற்றங்கள் இருந்தாலும், நீண்ட கால நோக்கில் ஒட்டுமொத்தமாக கடல்மட்டம் உயர்ந்து வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலோர கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை, விவசாயம், குடிநீர் என எல்லாமே இதனால் பாதிக்கப்படக்கூடும். நாகை மற்றும் தஞ்சை பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புநீர் கலந்து வருவது இதற்கு ஒரு சான்று. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படலாம்.
புயல் அபாயமும் அதிகம்!
கடல்மட்ட உயர்வு மட்டுமின்றி, தமிழகத்தின் புயல் அபாயமும் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் வங்காள விரிகுடாவில் மட்டும் 62 புயல்கள் உருவாகியுள்ளன. கடல்மட்டம் உயரும்போது, புயல் சீற்றத்தின் தாக்கம் இன்னும் அதிகமாகி, கடலோரப் பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும்.
தற்காத்துக் கொள்வது எப்படி?
ஆய்வாளர்கள் இதற்கான சில தீர்வுகளையும் முன்வைக்கின்றனர். கடல் சுவர்கள் கட்டுதல், சதுப்புநிலக் காடுகளை உருவாக்குதல், இயற்கையான கடற்கரைப் பகுதிகளை மீட்டெடுத்தல் போன்ற வழிமுறைகள் இதில் அடங்கும். ஆனால், இவை எல்லாவற்றையும் விட, அரசின் துணையுடன் நாமும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வின் மையக்கருத்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.