அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைத்து வருகின்றன. விண்வெளியில் பல்வேறு ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. வீரர்களை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ரஷ்யா கடந்த புதன்கிழமை சர்வதேச விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது. கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் விண்கலம் மூலம் 3 வீரர்களை வெற்றிகரமாக அனுப்பியது. அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் 2 ரஷ்யா வீரர்கள் சோயுஸ் விண்கலத்தில் பயணம் செய்தனர்.
அமெரிக்க விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் சோயுஸ் விண்கலத்தில் கடந்த புதன்கிழமை பயணம் செய்தனர்.
அமெரிக்கா-ரஷ்யாவிற்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க வீரர், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் அனுப்பபட்டார். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) வீரர் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி மற்றும் நாசா விண்வெளி வீரர் பாப் ஹைன்ஸ் ஆகியோர் ஏற்கனவே விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சோயுஸ் விண்கலம் விண்வெளி நிலையத்தில் நுழையும் புகைப்படத்தை இருவரும் எடுத்து அனுப்பியுள்ளனர். இது அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. கிறிஸ்டோஃபோரெட்டி ட்விட்டரில் 2 படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதில், "சோயுஸ் விண்கலம் நுழையும் அற்புதமான காட்சியை நாங்கள் கண்டோம். செர்ஜி, டிமிட்ரி மற்றும் ஃபிராங்க் இன்னும் சில மணிநேரங்களில் எங்களுடன் வந்து இணைவார்கள். புதிய வீட்டிற்கு அவர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ஹைன்ஸ் 4 புகைப்படங்களை பகிர்ந்து, "விண்வெளியில் ராக்கெட் வருகையை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அற்புதமாக உள்ளது. நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ சோயுஸ் விண்கலத்தில் உள்ளார். அவர்களின் வருகைக்கு காக்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil