/indian-express-tamil/media/media_files/2025/09/07/blood-moon-2-1-2025-09-07-12-09-25.jpg)
இன்று முழு சந்திர கிரகணம்- பிளட் மூன்: சென்னையில் பொதுமக்கள் பார்வையிட இரவில் சிறப்பு ஏற்பாடு
வானியல் ஆர்வலர்களே, நீங்கள் எதிர்பார்த்த அந்த நாள் இன்றுதான்! இந்த ஆண்டின் மிக அரிய நிகழ்வான முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse), அதாவது ரத்த நிலா, இன்று (செப்டம்பர் 7) இரவு நடைபெற உள்ளது. இதை வெறும் கண்களால் நாம் காண முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
பொதுவாக, சூரியன், நிலா மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும்போது அது சந்திர கிரகணம் எனப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் சந்திர கிரகணம் தோன்றிய நிலையில், இப்போது முழுமையான கிரகணம் நிகழவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9:57 மணி முதல் 1:27 மணி வரை இந்த நீண்ட சந்திர கிரகணம் நிகழும். இதில், முழு கிரகணம் இரவு 11:42 முதல் 12:33 மணி வரை தெரியும். இந்த நேரத்தில் நிலவு அடர் சிவப்பு நிறத்தில் மின்னும். இதுவே "ரத்த நிலா" (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.
இந்த அரிய நிகழ்வை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி உட்பட உலகின் பல்வேறு இடங்களில் காணலாம். இந்தியாவில், குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் வானம் தெளிவாக இருந்தால் இந்த முழு கிரகணத்தை மிகத் தெளிவாக ரசிக்கலாம்.
சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள்!
இந்த அதிசயமான நிகழ்வை பொது மக்கள் தொலைநோக்கி வழியாகக் காண, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 9 மணி முதல் கிரகணம் முடியும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட அரிய வானியல் நிகழ்வு இனிமேல் 2028 டிச.31 அன்றுதான் மீண்டும் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த வாய்ப்பை நழுவவிடாமல் அனைவரும் கண்டுகளியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.