/indian-express-tamil/media/media_files/2025/09/27/drilling-11000-meter-hole-2025-09-27-10-53-03.jpg)
2,000 டன் இயந்திரம், 1,300 மடங்கு அழுத்தம்: பாலைவனத்தில் 11,000 மீட்டர் ஆழத்திற்குத் துளையிடும் சீனா!
புவியின் மேலோட்டைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கக் கூடிய முயற்சியாக, டக்லமக்கான் பாலைவனத்தின் கொளுத்தும் வெப்பத்தில் 11,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்குத் துளையிடும் பணியை சீனா தொடங்கி உள்ளது. மே 2024-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், ரஷ்யாவின் புகழ்பெற்ற கோலா சூப்பர்டீப் போர்ஹோலுக்கு (Kola Superdeep Borehole) இணையான, மிக லட்சியமான அறிவியல் துளையிடும் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இது சீனாவின் ஆழமான-பூமி ஆய்வில் மைல்கல் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சீனா தேசிய பெட்ரோலியக் கழக (CNPC) மேற்பார்வையில் நடைபெறும் இந்தப் பணியானது, இலக்கு ஆழத்தை அடைய 450 நாட்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜின்ஜியாங்கில் உள்ள தொலைதூர தாரிம் பேசினில் அமைந்துள்ள இத்திட்டம், 10 கண்ட அடுக்குகளைக் கடந்து, 145 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கிரெடேசியஸ் அமைப்பை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீனா ஏன் இவ்வளவு ஆழமாகத் துளையிடுகிறது?
தீவிரமான டெக்டோனிக் நகர்வுகள் மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றத்தின்போது உருவான கிரெடேசியஸ் அடுக்கு, பண்டைய கால நிலைப் பதிவுகள், தட்டு நகர்வுகள் மற்றும் புதைபடிவ எரிபொருள்கள் உருவாக்கம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வைத்திருக்கக்கூடும். பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடப்படாத பூமியின் ஒருபகுதியைப் பார்க்க, இந்தத் துளையிடும் பணி விஞ்ஞானிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.
தாரிம் பேசின் பகுதி ஏற்கனவே அதன் எரிசக்தி திறனுக்காக அறியப்படுகிறது. சிக்கலான புவியியல் அமைப்புகளில் சிக்கியுள்ள பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இப்பகுதியில் உள்ளன. சீன ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் வாங் சுன்ஷெங் கூறுகையில், "பல மில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் தொடப்படாத கிரகத்தின் ஒரு பகுதியை டிகோட் செய்வதே" இதன் இலக்கு என்றார். புதிய வள இருப்புகளை வெளிக்கொணர்வது, நிலநடுக்க முன்னறிவிப்பு மாதிரிகளை மேம்படுத்துவது மற்றும் புவியியல் வரைபடங்களைத் துல்லியமாக்குவது ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் பெரிய பலன்களாகும்.
ஆழமான துளையிடுதலின் சவால்கள்:
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மிகப்பெரியவை. 2,000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட துளையிடும் கருவி, 200°C (392°F) வெப்பநிலை மற்றும் மேற்பரப்பு அழுத்தத்தைவிட 1,300 மடங்கு அதிகமான அழுத்தத்தையும் தாங்க வேண்டும். இந்த தீவிரமான வெப்பம் மற்றும் அழுத்தம் எஃகு கம்பிகளையும் வளைத்து, கழற்றக்கூடிய அளவுக்கு வலிமையானது.
இந்த அதி-ஆழமான துளையிடும் திட்டங்கள் வழக்கமாக எதிர்பாராத பாறைச் சரிவுகள், திடீர் இடிபாடுகள் மற்றும் உபகரணங்களின் அதிக வெப்பம் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. 1990-களில் கைவிடப்பட்ட சோவியத் காலத்திய கோலா சூப்பர்டீப் போர்ஹோலையும் இத்தகைய சிக்கல்கள் ஆட்டிப்படைத்தன.
இதேபோன்ற சவால்களை எதிர்கொண்டாலும், கோலா போர்ஹோல் திட்டம் 6,000 மீட்டர் ஆழத்தில் நுண்ணிய பிளாங்க்டன் புதைபடிவங்கள் மற்றும் யாரும் எதிர்பார்க்காத ஆழத்தில் நீரையும் கண்டுபிடித்தது, இது நூற்றாண்டின் மிக ஆச்சரியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் சிலவற்றைப் பெற்றுத் தந்தது. சீன அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புவியியல் விஞ்ஞானி சன் ஜின்ஷெங், சீனாவின் இந்த புதிய துளையை "ஒரு கனரக டிரக்கை 2 பட்டு நூல்களின் மீது ஓட்டுவதற்கு" ஒப்பிட்டு, இத்தகைய ஆழத்தில் செயல்பாடுகளின் தீவிரத் தன்மையைக் குறிப்பிட்டார்.
இந்தத் துளையிடும் முயற்சியின் மூலம் புதிய புதைபடிவ எரிபொருள்கள், பண்டைய நுண்ணுயிர்கள் அல்லது புவியியல் முரண்பாடுகள் என எது கண்டுபிடிக்கப்பட்டாலும், அது நம்முடைய அறிவியல் புரிதலை மட்டுமல்லாமல், வளத்திற்காக ஏங்கும் உலகில் அறிவின் சமநிலையையும் மாற்றும் திறன் கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.