/indian-express-tamil/media/media_files/2025/09/28/earth-magnetic-field-2025-09-28-14-59-48.jpg)
விவசாய அழிவு முதல் கேன்சர் வரை... பூமியின் காந்தப்புலம் இல்லாவிட்டால் என்ன ஆகும்?
நம் பூமிக்கு கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு அரண் உள்ளது. அதுதான் பூமியின் காந்தப்புலம் (Earth's Magnetic Field). இது வெறும் இயற்கை அதிசயம் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவுக்கும் பின்னணியில் இருந்து பாதுகாக்கும் மௌன சக்தி. இந்த காந்தப்புலம் தான் நமக்கு வழிகாட்டுகிறது, உயிர்களை பாதுகாக்கிறது மற்றும் சூரியக் கதிர்வீச்சிலிருந்து நம்மை காக்கும் கவசமாகவும் செயல்படுகிறது. ஒருவேளை இந்தக் காந்தப்புலம் பலவீனமடைந்தாலோ (அ) முற்றிலும் மறைந்துவிட்டாலோ என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா? நாம் சாதாரணமாக நினைக்கும் பல விஷயங்கள் ஸ்தம்பித்துப் போகும் அபாயம் உள்ளது.
காந்தப்புலம் எப்படி இயங்குகிறது?
பூமியின் மையத்தில், வெளி அடுக்கில் உள்ள உருகிய இரும்பு (molten iron) தொடர்ந்து சுழன்று நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சுழற்சியால் தான் காந்தப்புலம் உருவாகிறது. காந்தப்புலம் விண்வெளியில் ஒரு பந்து போலப் படர்ந்து, காந்தக் கோளத்தை (Magnetosphere) உருவாக்குகிறது. சூரியனில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் (Solar Wind) பூமியை நோக்கி வரும்போது, இந்த காந்தக் கோளம் தடுத்து, பூமிக்குள் வரவிடாமல் திசை திருப்புகிறது. இந்த பாதுகாப்பின் பலன்தான் நாம் இன்று உயிர் வாழும் முக்கியக் காரணம்.
காந்தப்புலம் பலவீனமடைந்தால், நாம் சாதாரணமாகச் சவுகரியமாக அனுபவிக்கும் பல வசதிகள் நின்றுபோகும்.
1. வழிகாட்டுதல் மற்றும் தகவல் தொடர்பு முடக்கம்
ஜி.பி.எஸ் மற்றும் திசைகாட்டி: நாம் பயணங்களுக்குப் பயன்படுத்தும் ஜி.பி.எஸ். மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான காம்பஸ் (Compasses) ஆகியவை காந்தப்புலத்தின் நிலையான செயல்பாட்டையே நம்பியுள்ளன. காந்தப்புலத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டால், இவை தவறான திசையைக் காட்ட ஆரம்பிக்கும்.
சேட்டிலைட்டுகள் பாதிப்பு: வலுவான காந்தப் பாதுகாப்பு இல்லாதபோது, சூரியப் புயல்கள் அதிக உக்கிரத்துடன் பூமியைத் தாக்கும். இதனால் தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்கள் சேதமடையலாம் அல்லது ஜி.பி.எஸ்., ரேடியோ மற்றும் இண்டர்நெட் சேவைகளே துண்டிக்கப்படலாம்.
2. உயிரினங்களின் இடம்பெயர்வு குழப்பம்
கடல் ஆமைகள், வலசை போகும் பறவைகள் (Migratory Birds), சால்மன் மீன்கள் போன்ற பல விலங்குகள் தங்கள் வழியைக் கண்டறியக் காந்தப் புலத்தைப் பயன்படுத்துகின்றன. அவை காந்தத் திசைகளை உணர்ந்து, தங்கள் பாதைகளை மனதளவில் வரைபடமாக்குகின்றன. காந்தப்புலம் மாறினால், இந்த விலங்குகள் குழப்பமடைந்து, அவற்றின் இடப்பெயர்வு தோல்வியடையலாம். இது அவற்றின் உணவுச்சங்கிலி, வாழ்விடத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
3. விவசாயத்திற்குப் பெரிய ஆபத்து
தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகள் (Pollinators) காந்தப்புலத்தின் தூண்டுதலைப் பயன்படுத்துவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காந்தப்புலத்தில் ஏற்படும் இடையூறுகள் பூச்சிகளின் நடத்தையைப் பாதித்தால், விவசாயத்தில் மகரந்தச் சேர்க்கை குறைந்து, பயிர்கள் பாதிக்கப்படும். மேலும், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவிகள் மற்றும் உணரிகளுக்கு (Sensors) மின்சக்தி மற்றும் சிக்னல் தடங்கல்கள் ஏற்பட்டால் பெரும் விளைச்சல் இழப்பு ஏற்படும்.
4. கதிர்வீச்சினால் புற்றுநோய் அபாயம்
இதுதான் மிகவும் பயங்கரமான விளைவு. காந்தப்புலம் இல்லாவிட்டால், சூரியனிலிருந்து வரும் அதிக மின்னூட்டப்பட்ட துகள்களும், அண்டக் கதிர்வீச்சும் (cosmic rays) நேரடியாக பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும். இந்தக் கதிர்வீச்சு உயிரினங்களின் மரபணுவில் (DNA) நேரடியாகச் சேதத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கும். மேலும், இது பூமியின் ஓசோன் அடுக்கையும் சிதைத்து, நம்மைப் பாதுகாக்கும் மற்ற இயற்கை அரண்களையும் பலவீனப்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.