/indian-express-tamil/media/media_files/2025/10/28/antarctica-carbon-layer-2025-10-28-18-08-40.jpg)
அண்டார்டிகா பனிக்கு அடியில் மறைந்திருக்கும் கார்பன் அடுக்கு... புதிய ஆய்வின் அதிர்ச்சியூட்டும் தகவல்!
நமக்குத் தெரிந்த வரையில், மனிதர்கள் வெளியிடும் மொத்தக் கார்பன் டை ஆக்சைடில் CO2 கால் பகுதியை உலகக் கடல்கள் உறிஞ்சுகின்றன. இதில், தென் துருவத்தில் உள்ள தென் பெருங்கடல் (Southern Ocean) மட்டுமே கிட்டத்தட்ட 40% கார்பனை உறிஞ்சி, பூமியைப் பாதுகாக்க மாபெரும் கடற்பாசி போலச் செயல்படுகிறது.ஆனாலும், புவி வெப்பமடையும் போது, கார்பன் உறிஞ்சும் கடலின் திறன் குறைந்திருக்க வேண்டும். ஆனால், தென் பெருங்கடல் கடந்த சில தசாப்தங்களாக தொடர்ந்து அதிக கார்பனை உறிஞ்சி வருகிறது. ஏன்? இந்தக் காலநிலை மர்மம் விஞ்ஞானிகளை திணறடித்து வந்தது. இப்போது, அதற்கான பதில் கிடைத்துள்ளது.
ஆல்ஃபிரட் வெஜெனார் நிறுவன (AWI) ஆராய்ச்சியாளர்கள் சுவாரசியமான உண்மையைக் கண்டறிந்துள்ளனர். புவி வெப்பமயமாதலால் துருவப் பனிப்பாறைகளும் பனிக்கட்டிகளும் உருகியதால், உருகிய தூய நீர் (Fresh Water) கடலில் கலக்கிறது. அத்துடன், அதிகரித்த மழையும் சேருகிறது. இந்த உருகிய நீர், கடலின் மேற்பரப்பில் உள்ள நீரை குறைந்த உப்புத்தன்மை கொண்டதாகவும், லேசானதாகவும் ஆக்குகிறது.
இந்த லேசான நீர், ஆழமான, கனமான நீரின் மீது ஒரு தடிமனான 'மூடி' (Cap) போல அமைகிறது. ஆழமான கடலில் அதிக அளவில் கார்பன் சேமிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, சுழற்சி மூலம் இந்தக் கார்பன் நிறைந்த நீர் மேலே வர வேண்டும். ஆனால், இப்போது உருவான இந்த லேசான 'மூடி', ஆழத்தில் உள்ள கார்பன் மேற்பரப்புக்கு வந்து வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுத்து பூட்டி வைக்கிறது. இதுவே தென் பெருங்கடல் தொடர்ந்து CO2-ஐ உறிஞ்சுவதற்குக் காரணம்.
1972 முதல் 2021 வரையிலான 50 ஆண்டுகாலத் தரவுகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, 1990-களிலிருந்து இந்தக் கடல் அடுக்குகள் பிரியும் எல்லை மிகவும் வலுவடைந்துள்ளதைக் கண்டறிந்தனர். இது தற்காலிகமாக நமக்குக் கிடைத்த வெற்றிதான்.ஆனால், இந்த சமநிலை என்றென்றும் நீடிக்காது.
புவி வெப்பமயமாதலால் மேற்குத் திசைக் காற்றுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இந்தக் காற்றுகள் இப்போது ஆழ்கடலில் உள்ள கார்பன் நிறைந்த நீரை மேற்பரப்பை நோக்கித் தள்ளுகின்றன. 1990-களிலிருந்து இந்தக் கார்பன் நிறைந்த ஆழடுக்கு சுமார் 40 மீட்டர் உயர்ந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த 2 அடுக்குகளும் (மேற்பரப்பு நீர், ஆழமான கார்பன் நீர்) கலக்க ஆரம்பித்தால், பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த மகத்தான கார்பன் வாயு CO2 திடீரென வளிமண்டலத்திற்குத் தப்பிக்க ஆரம்பிக்கும். அது நடந்தால், தென் பெருங்கடலின் பாதுகாப்பு அரண் உடைந்து, புவி வெப்பமயமாதல் மேலும் விரைவுபடுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
வரும் ஆண்டுகளில் இந்த ஆபத்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், இந்தக் கடுமையான அண்டார்டிக் காலங்களில் (Antarctic winter) அதிகத் தரவுகளைச் சேகரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us