விண்வெளி ஆய்வில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளது! அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) தனது ஏ.எக்ஸ்–4 (Ax-4) என்ற 4-வது வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தை வரும் மே மாதம் 29 ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இந்திய விமானப்படையின் குருப் கேப்டன் (Group Captain) ஷுபன்ஷு ஷுக்லா முக்கிய பங்கு வகிக்கவுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: India’s Shubhanshu Shukla set to travel to International Space Station on May 29
ஷுபன்ஷு ஷுக்லாவுடன், இந்த ஏ.எக்ஸ்–4 (Ax-4) குழுவில் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த டிபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். இதில் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி போலந்தின் 2-வது விண்வெளி வீரர் ஆவார், இதற்கு முன்பு 1978 இல் போலந்து வீரர் ஒருவர் விண்வெளிக்கு சென்றிருந்தார். அதேபோல், டிபோர் கபு ஹங்கேரியின் 2-வது தேசிய விண்வெளி வீரர் ஆவார், 1980 க்குப் பிறகு ஹங்கேரியிலிருந்து ஒருவர் விண்வெளிக்கு செல்வது இதுவே முதல் முறை.
பெக்கி விட்சன் ஏற்கனவே அமெரிக்க விண்வெளி வீரர்களில் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார், மேலும் இது அவரது 2-வது வணிகரீதியிலான விண்வெளிப் பயணமாகும். இந்த ஏ.எக்ஸ்–4 (Ax-4) குழு ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவுள்ளது. அவர்கள் அங்கு சுமார் 14 நாட்கள் தங்கி, பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1984 ஆம் ஆண்டு, ராகேஷ் சர்மா சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். அதன்பிறகு இப்போது, ஷுபன்ஷு ஷுக்லாவின் இந்த பயணம், இந்திய விண்வெளி ஆய்வின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய இரு நாடுகளுக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். முதன்முறையாக இந்த நாடுகள் தங்கள் வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகின்றன. இது சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) - ன் இந்த ஏ.எக்.ஸ்-4 (Ax-4) பயணம், வணிகரீதியிலான விண்வெளிப் பயணங்களின் முக்கியத்துவத்தையும், பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. ஷுபன்ஷு ஷுக்லாவின் இந்த வெற்றிகரமான பயணம், எதிர்கால இந்திய விண்வெளி வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.