இந்தியாவின் முதல் 'இரவு வான் சரணாலயம்' லடாக்கின் ஹான்லேயில் அமைக்கப்பட உள்ளது. நாட்டின் வானியல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக இந்த சரணாலயம் அமைக்கப்படுகிறது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் இருவரும் சமீபத்தில் இதுகுறித்து சந்தித்து பேசினர். இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜிதேந்திர சிங் கூறுகையில், லடாக்கின் ஹான்லே பகுதியில் 'இரவு வான் சரணாலயம்' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரணாலயம் அமைப்பது தொடர்பாக யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) லே மற்றும் இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆகியவற்றுக்கு இடையே சமீபத்தில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆப்டிகல், இன்ஃப்ரா-ரெட் மற்றும் காமா-ரே தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "இரவில் வெளிப்படும் ஒளி மாசுபாடு மற்றும் வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்படுகிறது. இது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கை வானிலைக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது" என்றார்.
ஹன்லே லடாக்கின் குளிர்ந்த பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. மனிதர்கள் இப்பகுதியில் வசிக்கவில்லை. எப்போதும் வறண்ட வானிலையே நிலவும் பகுதியாகும். சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ) ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு இந்தாண்டு இறுதிக்குள் லடாக் சென்று சிஎல்ஆர்ஐயின் பிராந்திய கிளை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்யும் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil