/indian-express-tamil/media/media_files/2025/01/27/kf030JCSrq8kYaYNF1ZR.jpeg)
கோவை மாவட்ட தனியார் அமைப்பின் சார்பாக கோவை நேஷனல் மாடல் பள்ளியில் பிக் பாங் 2025 தேசிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
தேசிய அளவில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்ற ”பிக் பாங் 2025" அறிவியல் கண்காட்சி கோவை அவிநாசி ரோடு நேசனல் மாடல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
கோயம்புத்தூரில் நடந்த இந்த அறிவியல் கண்காட்சியின் வெற்றி இந்திய இளைஞர்களை நாளைய கண்டுபிடிப்பாளர்களாகவும் தலைவர்களாகவும் உருவாக்கும் திறனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 12 - 17 வயதிற்குட்பட்ட மாணவர்களை புதுமை படைப்புகளை உருவாக்கும் பாதைக்கு ஊக்கப்படுத்துவதன் வாயிலாக, ஐ.நா.சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப்போகும். அதே வேளையில் நடைமுறை சிக்கல் களையும் தீர்வுகளுடன் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிக்கத் தயாராகும் புதிய தலைமுறை மாற்றத்தை உருவாக்குபவர்களை இந்தத் திட்டம் கண்டறிந்து வளத்தெடுக்க உதவும் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தேசிய அளவில் இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. ஐஎக்ஸ்புளோர் அறக்கட்டளை மற்றும் அடல் கண்டுபிடிப்பு இயக்கம், நிதி ஆயோக் அமைப்புகள் இணைந்து இந்த போட்டியை நடந்தியது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,100 இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து மொத்தம் 258 சமர்ப்பிப்புகள் பெறப்பட்டன. அவற்றில் நவீனகால சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையிலான மனித வாழ்விற்கு பெரிதும் பயனளிக்கும் புதுமையான படைப்புகளாக அமைந்தவற்றில், அறிவியல் அறிஞர்களின் இறுதிகட்ட பரிசீலனைக்கு பிறகு 128 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதிகட்டத்தில் தேர்வான இளம் படைப்பாளர்களின் மெச்சத்தகுந்த படைப்புகள் கோவை பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த அறிவியல் கண்காட்சியின் நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புது டெல்லி, இந்திய விமானப்படை, ஏர் கமாண்டர் அஜய் குண்ணத் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
இந்த கண்காட்சியில் பங்கேற்ற ஆகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும் ஆகஸ்ட் 2025-இல் மலேசியாவில் நடைபெறும் மதிப்புமிக்க ஐ.இ.இ.இ ஜூனியர் ஐன்ஸ்டீன் புதுமை அறிவியல் கண்டுபிடிப்பளர் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனுப்பிவைக்கபபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் ராஜேந்திரன் மற்றும் ரோட்டேரியன் நிகழ்ச்சித் தலைவர் ஆர். நவநீதகிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை அறிவியல் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் முதன்மை விருந்தினராக எல்.ஜி எக்விப்மெண்ட் நிறுவன தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் வேணுமாதவ், ஐஎக்ஸ்ப்ளோர் அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ராமலதா மாரிமுத்து, புரோபல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் வித்யா செந்தில்குமார் (சந்தைப்படுத்தல் அண்டு பிராண்டிங்) மற்றும் கோவை பாரடே ஓசோன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே. விவேகானந்தன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
கண்காட்சி நடுவர்களாக ரூட்ஸ் நிறுவன முன்னாள் துணைத்தலைவர் ஏ. நாராயணசாமி, டி.யூ.ஆர்.ஓ கிட்சன் ஆட்டோமேட்ஸ் நிறுவன இன்னவேசன் பிரிவு தலைவர் டாக்டர் என். ஆதர்ஸ் விக்ரம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி உதவி பேராசிரியர் எஸ். சசிகலா, ஜாப்பனீஸ் பிளஸ் - எஸ்.எஸ்.டி குளோபல் நிறுவன இயக்குனர் ரேகா நவநீதகிருஷ்ணன், பாஸ் டிஜிடல் நிறுவன சீனியர் உதவி ஆலோசகர் எஸ். செல்வி, பாஸ் குளோபல் சாப்ட்வேர்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவன திட்ட உரிமையளர் அஸ்வின் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த அறிவியல் கண்காட்சியை காலை முதல் இரவு வரை 5000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.
அறிவியல் கண்காட்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏர் கமாண்டர் அஜய் குண்ணத் பேசியதாவது: “உலகில் இளைஞர்கள் நிறைந்த தேசம் இந்தியாதான். நமது நாட்டில் இளைஞர்களின் சராசரி வயது 28 ஆக உள்ளது. இத்தகைய இளைஞர் சக்தியை முறையாக பயிற்சி அளித்து சரியான வகையில் பயன்படுத்தினால் இந்தியா உலக அரங்கில் விரைவில் முதன்மை பெறும். போட்டி நிறைந்த உலகில் வினாடி கூட முக்கியம்தான். வினாடிக்கு வினாடி உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து இளைஞர்கள் ஓடிக்கோண்டே இருந்தால்தான் வெற்றியை வசமாக்க முடியும். மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
உலகம்தான் சிறந்த பள்ளிக்கூடம். பாட புத்தகங்களை தாண்டியும் மாணவர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான சங்கதிகள் உள்ளன. அவற்றில் நல்லவற்றை கற்றுக்கொண்டு வாழ்வில் நீங்கள் முன்னேற வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்பதோடு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட வேண்டும். உங்கள் கண்டுபிடிப்புகள் வாயிலாக இந்திய ராணுவத்திற்கும் நீங்கள் பங்களிப்பு செய்யலாம். இன்றைக்கு நவீன ஆயுதங்கள்தான் போர்களை முடிவு செய்கின்றன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், ரஷ்யா மற்றும் யுக்ரைன் போரை கவனித்தால் உங்களுக்கு புரியும். டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரோ நிறுவனத்திற்கும் உங்கள் புதிய கண்டுபிடிப்புகள் பயன்பெறும் வகையில் மாணவ செல்வங்கள் அறிவியல் அறிஞர்களாக உயர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள். இவ்வாறு கமாண்டர் பேசினார்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.