சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவின் நாசா வீரர்கள், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர்கள் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதையடுத்து வீரர்களை மீட்கும் பணியில் இரு விண்வெளி நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸிடம் நாசா ஆலோசனை நடத்தி வருகிறது எனக் கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தாண்டு செம்டம்பர் மாதம் ரஷ்யாவின் 3 வீரர்களுடன் சோயுஸ் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி ரஷ்ய வீரர்கள் விண்வெளி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வீரர்களின் நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. கசிவு ஏற்பட்ட நிலையிலும் வீரர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என நாசா, ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்தது.
இருப்பினும் வீரர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோயுஸ் MS-22 விண்கலத்தில் ஏற்பட்ட கூலன்ட் கசிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐஎஸ்எஸ்ஸில் உள்ள தங்கள் விண்வெளி வீரர்களை மீட்க மற்றொரு சோயுஸ் விண்கலத்தை அனுப்புவது குறித்து ரஷ்யா ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவால் மற்றொரு சோயுஸ் விண்கலத்தை அனுப்ப முடியாவிட்டால், அல்லது சில காரணங்களால் அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது என்று முடிவு செய்தால், நாசா மற்றொரு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்கிறது.
நாசா செய்தித் தொடர்பாளர் சாண்ட்ரா ஜோன்ஸ் கூறுகையில், இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸிடம் சில கேள்விகளைக் கேட்டுள்ளோம், ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் கூடுதல் உறுப்பினர்களை அங்கிருந்து பூமிக்கு கொண்டு வர முடியுமா? என்று கேட்டுள்ளோம். ஆனால் எங்களின் முதன்மையான நோக்கம் இது அல்ல என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் ராய்ட்டர்ஸ் இதுகுறித்து கேட்கையில், SpaceX பதிலளிக்கவில்லை.
ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் திறன்கள் குறித்து நாசா என்ன கேட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் தற்போது அங்கு உள்ளது. டிராகனின் தன்னுடைய குழு திறனை அதிகரிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்குமா அல்லது ரஷ்யா வெற்று விண்கலத்தை அனுப்புமா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
சோயுஸ் விண்கலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஐ.எஸ்.எஸ்ஸில் 6 மாத பணிக்காக அமெரிக்க விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ மற்றும் ரஷ்யா வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் மார்ச் 2023 இல் பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டனர். ஆனால் தற்போது கசிவு காரணமாக முன்கூட்டியே பூமிக்கு திரும்புவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/